சிங்கப்பூரில் இருந்தும் கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடுகிறார்.. அகதியாக அடைக்கலம் தருகிறது தாய்லாந்து!
சிங்கப்பூர்: இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால் தப்பி ஓடிவிட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்தனர். இவர்களது பதவி காலத்தில் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஒட்டுமொத்த இலங்கையே திவாலாகிப் போனது.

இதனால் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருட்கள் என அத்தனைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இலங்கையில் அனைத்து பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன. இதனால் இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக நாசமாகிப் போனது.
இந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண கோரி இலங்கை மக்கள் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளை முன்னெடுத்தனர். இலங்கை தலைநகர் கொழும்பின் காலி முகத் திடலில் இந்த கிளர்ச்சி மையம் கொண்டிருந்தது.பல்லாயிரக்கணக்கான மக்கள் கொட்டும் பனியிலும் இரவும் பகலுமாக காலிமுகத் திடலில் தங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர். மக்களின் இந்த போராட்டங்களின் உச்சமாக முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அப்போது மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளை பொதுமக்களே தீக்கிரையாக்கினர்.
இதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால பிரதமராக்கப்பட்டார். ஆனாலும் பொதுமக்களின் உக்கிர கோபம் தணியவில்லை. ஒருகட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் கைப்பற்றினர். இதனால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபாய ராஜபக்சே, பின்னர் இலங்கையைவிட்டே தப்பி ஓடினார். முதலில் மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபாய ராஜபக்சேவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே.
தற்போது சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் கோத்தபாய ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இது கோத்தபாய ராஜபக்சேவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நாளை தாய்லாந்துக்கு கோத்தபாய ராஜபக்சே தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கோத்தபாய ராஜபக்சேவுக்கு அகதியாக தாய்லாந்து அடைக்கலம் தர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications