1000 வாக்காளர்கள்.. ஆனா ஓட்டு போட யாருமே வரல.. எம்.எல்.ஏ வந்து கெஞ்சியும் மசியாத சிவகங்கை மக்கள்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சித்தூரணி, கல்லூரணி கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 பேர் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். பகல் 1 மணி வரை வெறும் 7 ஓட்டுகள் மட்டும் பதிவாகியுள்ளன.
மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மொத்தமாக 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணி முதலே எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் தகுந்த ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி வரை 40 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
சிவகங்கை லோக்சபா தொகுதி: சிவகங்கை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், நாம் தமிழர் கட்சி சார்பாக எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணி, கல்லூரணி கிராமங்களை சேர்ந்த 1,000 பேர் வாக்களிக்காமல் இந்த லோக்சபா தேர்தலை புறக்கணித்துள்ளனர். பகல் 1 மணி வரை 2 ஓட்டுகள் மட்டும் பதிவாகியுள்ளன.
2 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: இளையான்குடி பேரூராட்சி பகுதியில் இருந்து மருத்துவக் கழிவுகள், வீட்டுக் கழிவுகளை சித்தூரணி, கல்லூரணி கிராமப் பகுதியில் உள்ள பாசன கால்வாயில் கலப்பதாகவும், அதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாக அதிகாரிகளிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் பல முறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்பதால் தேர்தலை அப்பகுதி மக்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அடிப்படை வசதிகள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், சுமார் 30 ஆண்டுகளாக அரசிடமும், அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் தங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை என்பதால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஓட்டு போட யாருமே வரல: அதன்படி, கல்லூரணி, சித்தூரணி கிராமங்களில் சுமார் 1000 வாக்காளர்கள் உள்ள நிலையில், அனைவரும் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர். இதுவரை மொத்தமாக அங்கு 7 வாக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவையும் அருகில் உள்ள ஊரில் வசிப்பவர்களின் வாக்குகள் என்றும் கூறப்படுகிறது.
2 கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் புறக்கணித்த தகவல் அறிந்து, அங்கு சென்ற திமுக மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ தமிழரசி 2 மணி நேரமாக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வந்து மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி: ஆனால், இதையெல்லாம் சரி செய்து கொடுத்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்போம், இல்லையென்றால் எப்போதுமே தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என உறுதியாகக் கூறியுள்ளனர். எனவே, வாக்காளர்கள் யாருமே வராததால், வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் காத்திருந்து வருகின்றனர்.
இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications