"இருண்ட தமிழகம்.. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா?" பாயும் டிடிவி தினகரன்
சிவகங்கை: அமமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அக்கட்சியின் சார்பில் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 7ஆவது வார்டில் கொடியேற்றி வைத்தார்.

டிடிவி தினகரன்
அப்போது தாங்களே தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்று அதிமுக, பாஜக கட்சிகள் என்று சொல்லிக்கொள்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த டிடிவி தினகரன், "அட்டக்கத்தி வீரர்களுக்குப் பதில் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன்" என்று சுளீர் பதிலடி கொடுத்துள்ளார்,

வரம்பு மீறிய முதல்வர்
மேலும், அவர் பேசுகையில், "இன்று தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் மேடையில் திராவிட மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறிப் பேசியிருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு, திராவிட மாடல் பற்றிச் சொல்லவில்லை.

திராவிட மாடலா
ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் முடிந்த பிறகு திராவிட மாடல்.. திராவிட மாடல் என்று சொல்லி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் என முதல்வர் சொல்கிறாரா..! திமுக ஆட்சியில் தடுமாற்றம் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி கம்பெணி மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் எழுந்துள்ளன.

இருண்ட தமிழகம்
தேர்தலுக்கு முன்பு விடியல் அரசு, தமிழ்நாடே விடியப்போகிறது என்று எல்லாம் கூறி வந்தார்கள். ஆனால், இப்போது பாருங்கள்.. இன்று இருண்ட தமிழகம் தான். இப்போது என்று இல்லை திமுக எப்போது வந்தாலும் தமிழகம் இருளும். இப்போதும் அப்படி இருண்ட தமிழகம் தான் உருவாகி உள்ளது. இந்த ஆட்சியே தடுமாறுகிறது. மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications