சிவகங்கையில் 450 கிமீ பயணித்து வந்த திருடன்.. நெகிழ்ந்த ஓனர்.. இறுதியில் கடிதம் தான் ட்விஸ்ட்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பழையூர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவருடைய மோட்டார் சைக்கிளை திருடன் ஒருவன்திருடிச் சென்றுவிட்டார் . இதுபற்றி வீரமணியின் மனைவி அம்பிகா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினார்கள்.. இந்நிலையில் திருடிய மோட்டார் சைக்கிளை 450 கி.மீ. தூரம் ஓட்டி வந்து திருடன், அதனை நிறுத்திவிட்டு, அதில் மன்னிப்பு கடிதமும் எழுதி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பழையூர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் ஆசையாக தனது மகனுக்காக புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி வைத்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிளை சில தினங்களுக்கு முன்பு இரவில் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்துவிட்டு தூங்க சென்றிருக்கிறார் வீரமணி. மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை.. யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள். இதையடுத்து வீரமணியின் மனைவி அம்பிகா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீரமணி வீட்டின் அருகே அமைந்துள்ள விநாயகர் கோவில் அருகே திருட்டு போன மோட்டார் சைக்கிள் இருந்துள்ளது அந்த மோட்டார் சைக்கிளின் முகப்பு பகுதியில் ஒரு மன்னிப்பு கடிதமும் இருந்துள்ளது. அந்த கடிதத்தில், "நான் வெளியூரில் இருந்து வந்திருக்கிறேன். நான்கு வழிச்சாலையில் ஒரு சிக்கல் ஆகிவிட்டது. அவசரத்துக்கு உங்கள் தெரு பக்கம் வந்தபோது உங்கள் வண்டி என் கண்ணில் சிக்கியது. ஆபத்துக்கு பாவமில்லை என வண்டியை எடுத்துட்டேன். தற்போது இதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.
என் தவறை சரி செய்ய நானே 450 கிலோமீட்டர் ஓட்டி வந்து உங்கள் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளேன். நீங்கள் என்னை தப்பாக பேசுவீர்கள். அதனால் வருத்தம் இல்லை. இப்படிக்கு பிளாக் பாண்டா பயலுக..." என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வீரமணி தன்னுடைய மோட்டார் சைக்கிளின் முன்பக்க பையில் ரூ.1500 வைத்திருந்தாராம். ஆனால் அந்த பணம் எதுவும் மோட்டார் சைக்கிளில் இல்லை என கூறப்படுகிறது. திருடிச்சென்ற நபரே, மோட்டார் சைக்கிளை 450 கி.மீ. தூரம் ஓட்டிவந்து நிறுத்திவிட்டு சென்றது சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications