கார்த்தி சிதம்பரம் வைத்த கோரிக்கை.. “நாளைக்கே மீட்டிங்” - மேடையிலேயே உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரையூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 59,162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தன்னிடம் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சிக் கல்லூரியை சிவகங்கையில் துவங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மதுரை வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. சிவகங்கை, புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
சமத்துவபுரம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த சமத்துவபுரம் 9 ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு இன்று பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
நலத்திட்ட உதவிகள்
இதையடுத்து சிவகங்கை மாவட்டம், காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், ரூ.24.77 கோடி செலவில் 44 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.119.68 கோடி மதிப்பீட்டிலான 127 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 59,162 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
வேலு நாச்சியார்
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வீரம் விளைந்த இந்த சிவகங்கை மண்ணில் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். யாருக்கும் அஞ்சாத முத்து வடுகநாதர்- அந்த முத்து வடுகநாதர் மரணத்துக்குப் பிறகு தன்னோடு தாலியை காணிக்கையாக்கி, களத்தில் குதித்த வீரமங்கை தான் வேலுநாச்சியார் அவர்கள். அவர்களுக்குப் பிறகு, அவர்களுடைய மகள் வெள்ளை நாச்சியார் என்று மண்ணைக் காக்க, குடும்பம் குடும்பமாகத் தியாகம் செய்த பூமி தான், இந்த சிவகங்கை பூமி" எனத் தொடங்கிப் பேசினார்.
கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் என்னிடம், நாங்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து விட்டீர்கள், இப்போது ஒரு கோரிக்கை வைக்கிறேன், அதை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கோரினார். யாரிடத்தில் சொன்னால் அது நடக்கும் என்று தெரிந்து நீங்களும் சொல்கிறீர்கள். வீரமங்கை வேலு நாச்சியாரை போற்றும் வகையில் சிவகங்கை நகரை தலைமையிடமாகக் கொண்டு, வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சிக் கல்லூரி துவங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.
நாளையே
கார்த்தி சிதம்பரம் என்னிடம் முன்வைத்தது நியாயமான கோரிக்கை. ஆனால் நான் சென்னைக்கு இன்று இரவு தான் செல்கிறேன். நாளையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்துபேசி, ஆய்வு நடத்தி, அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் வைத்த கோரிக்கை தொடர்பாக மேடையிலேயே உறுதி சொன்ன முதல்வர் ஸ்டாலினை சிவகங்கை மக்கள் பாராட்டினர்.