காரைக்குடியில் ரூ. 100 கோடியில் அரசு சட்டக் கல்லூரி.. மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சிவகங்கை: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மாலை சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளார். இன்று காலை அவர் காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார்.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் தொடங்கி பூத் வாரியாக பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை சிவகங்கை மாவட்டம் சென்றுள்ளார். நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இன்றும் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். திருப்பத்தூர் வட்டம், சிராவயல் கிராமத்தில் மகாத்மாகாந்தி, கம்யூனிஸ்ட் இயக்கத் தோழா் ப. ஜீவா சந்தித்து பேசியதன் நினைவாக, அந்த இடத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ரூ.3.27 கோடி மதிப்பில் மணி மண்டபம் கட்டப்பட்டது.
அதை ஸ்டாலின் நேற்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் சிபிஐ மற்றும் சிபிஎம்கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். அப்போது சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் சென்னையில் மார்க்ஸ் சிலை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு ஸ்டாலின், சென்னையில் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி மார்க்ஸ் சிலை திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதன் பிறகு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். அப்போது அவரின் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அவர், நுற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். இறுதியாக நேற்று காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளா்ச்சித் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீறுகவியரசா் முடியரசனாரின் திருஉருவச் சிலையை திறந்து வைத்தார்.
நேற்று இரவு அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று சனிக்கிழமை காலை காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சியில் சுமார் ரூ.67 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதேபோல கழனிவாசல் பகுதியில் சுமார் ரூ. 100 கோடியில் கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இதையடுத்து ரூ. 13.36 கோடி மதிப்பில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 2,559.50 கோடி மதிப்பில் 49 நிறைவடைந்த திட்டப்பணிகளையும் முதலமைச்சர் திறந்துவைத்தார். அந்த அரசு விழாவில் 15,453 பயனாளிகளுக்கு ரூ. 205.06 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இறுதியாக கழனிவாசல் பகுதியில் ரூ. 32 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications