திமுக அரசின் பொங்கல் பரிசு ஆயிரம் பத்தாது.. 5 ஆயிரம் கொடுக்கனும்.. ஆர்.பி உதயகுமார் வலியுறுத்தல்
சிவகங்கை: உலகமே கொண்டாடும் பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக நின்று கேள்வி எழுப்பி வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும்.
முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.. அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக பொங்கல் பரிசு பொருட்களும் விரிவுபடுத்தப்பட்டு வந்தன. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமாக வழங்கப்பட்டது.
21 வகையான பரிசுத்தொகுப்புகளுடன்
அதன்பிறகு தேர்தலுக்குப் பிறகு கடந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக 21 வகையான பரிசுத்தொகுப்புகளுடன் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.
ஆர் பி உதயகுமார் பேட்டி
வருகிற 2-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகையாக ஆயிரம் அறிவித்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், பொங்கல் பரிசுத்தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பொங்கல் பரிசுத்தொகையை கூடுதலாக வழங்க கோரி பேசியுள்ளார். இது குறித்து இன்று சிவகங்கையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது:-
பால், மின்கட்டணம், சொத்து வரி
ஜி- 20 மாநாட்டு ஆலோசனை கூட்டத்தில் 40 கட்சிகள் கலந்து கொண்டன. அதில் அ.தி.மு.க., சார்பில் பழனிசாமிக்கு தான் மத்திய அரசு அதிகார பூர்வ அழைப்பு விடுத்தது. தேர்தல் கமிஷன் அ.தி.மு.க.,வின் வரவு செலவு கணக்கை தான் அங்கீகரித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் பால், மின்கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து பிரதான எதிர்கட்சியாக நின்று அ.தி.மு.க., தான் சட்டசபையில் கேள்வி எழுப்பி வருகிறது. தொடர்ந்து மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்துகிறோம்.
விரைவில் மக்களாட்சிக்கான காலம் வரும்
தற்போது தமிழகத்தில் திமுகவால் மன்னராட்சி புகுத்தப்பட்டுள்ளது. விரைவில் மக்களாட்சிக்கான காலம் வரும். இதுபோன்று மன்னராட்சி நடவடிக்கைக்கு தேர்தல் காலத்தில் மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். கொரோனா காலத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் நிவாரண உதவி வழங்கினோம். உலகமே கொண்டாடும் பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்" என்றார்.