பாஜகவால்தான் அதிமுக ஆட்சியே இருந்தது.. துரோகம் செய்து விட்டார் எடப்பாடி.. பன்னீர் செல்வம் தாக்கு
சிவகங்கை: பாஜகவின் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்து உச்சபட்ச துரோகம் செய்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராகி அதிமுக கட்சியை ஐந்தாக உடைத்திருக்கிறார் என்றும் கடுமையாக சாடியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு உடைத்து ஒட்டியது அதிமுக. இரட்டை குழல் துப்பாக்கி போல ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டு வந்தனர். கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ஒற்றைத் தலைமை விவகாரம் வெடிக்கவே, ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவில் அவமானப்படுத்தப்பட்டார்.

எம்ஜிஆர் மாளிகையில் புகுந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தவே, அதிமுகவை விட்டு ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்ற படியேறினார். சட்டப்போராட்டங்கள் மூலம் கட்சியைக் கைப்பற்ற முயன்றார். ஆனால், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
சட்டமும் நேரமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராகி விட்டார். அவரது அரசியல் பயணம் என்னவாகப்போகிறது என்று அவருக்கே தெரியவில்லை. லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்து விட்டு தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். கொடி, சின்னம், அதிமுக லெட்டர் பேட் என எதையுமே ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த அனுமதியில்லை.
இந்த சூழ்நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தனது ஆதரவாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்று கூறி வருகிறார். இரட்டை இலை சின்னத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் உரிமை கோரி வருவதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஓபிஎஸ் அணி சார்பில் தென்காசி இலஞ்சியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை எனக்கூறி சூழ்ச்சி செய்தனர். எப்படி குறுக்கு வழியில் முதல்வர் ஆனாரோ அதேபோன்று குறுக்கு வழியில் தன்னை பொதுச்செயலாளராக ஆக்கிக்கொண்டார்.
அவரது முடிவு கட்சியை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்தும் வெளியேறி தன்னந்தனியாக நிற்கிறார். அவரது பண பலம் கட்சி நிர்வாகிகளிடம் மட்டும்தான் எடுபடும். துரோகம் செய்தவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்றார்.
சிவகங்கையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான்கரை ஆண்டுகள் பாஜகவின் தயவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது என அதிமுக முன்னாள் முதல்வரும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். பாஜகவின் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்து உச்சபட்ச துரோகம் செய்துள்ளார். மேலும் எடப்பாடி பொதுச்செயலாளராகி அதிமுக கட்சியை ஐந்தாக உடைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், தற்போது நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமிதான் அவசரப்பட்டு வெளியேறிவிட்டார். மோடி மூன்றாவது முறையும் பிரதமராக வருவார். தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியுடனும் பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications