சிவகங்கையில் தொடங்கியது மாற்றம்.. குடிமகன்களே குஷியான தகவல்.. டாஸ்மாக் போட்டோவை பாருங்க
சிவகங்கை: டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பியைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், முதல்முறையாக ஒரு டாஸ்மாக்கில் எம்ஆர்பி விலையில் மதுபானங்கள் விற்கப்படும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும், உயிரை கொல்லும், அவர்களின் வீட்டின் பொருளாதாரத்தையும் அழிக்கும். அவர்களின் சிந்தனையையும் செயல் திறனை கொல்லும் என்றாலும், மதுகுடிப்பவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறையவே இல்லை. ஒவ்வாரு ஆண்டும் மதுவிற்பனை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,329 சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது . வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி அளவிற்கு மதுவிற்பனை நடைபெறும் என்ற கூறப்படுகிறது.
இந்த சூழலில் மதுபான பிரியர்கள் நீண்ட நாட்களாக அதிக விலை பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். பாட்டிலுக்கு மேல் 10 ரூபாய் கொடுத்தால் தான் மதுகிடைக்கும் என்கிற நிலை காணப்படுகிறது என்பது மதுபிரியர்களின் பரவலான குற்றச்சாட்டு.
அண்மையில் கூட அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இதுபற்றி விளக்கமும் அளித்தார். பொத்தாம் பொதுவாக அனைத்து கடைகளிலும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்தார். அதேநேரம் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை எண்ணை கூறினால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனிடையே தமிழகம் முழுவதுமே குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்த நிலையில் 'கரூர் குரூப்' என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் அராஜகமாகப் பணம் வசூல் செய்வதாக நேற்று புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களை கடிதம் அனுப்பி இருக்கின்றன. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது "மத்திய சென்னை மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரூர் குரூப்' என சொல்லிக் கொண்டு மனோகர், சம்பத் மற்றும் ஷியாம் ஆகியோர் நேரில் வந்தும் , தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ரூ.50 ஆயிரம், ரூ.45 ஆயிரம் எனக் கடைகளின் விற்பனைக்கு ஏற்றார்போல் பணம் தர வற்புறுத்துகிறார்கள். மாவட்ட மேலாளர் கூறியதாலேயே கடைகளில் வசூலிப்பதாகவும் சொல்கிறார்கள்.
இவர்கள் யார், எதற்கு கடையிலிருந்து பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டால் பணம்கொடுக்காத கடைப் பணியாளர்களை சோதனையில் சிக்க வைத்து பணிநீக்கம் செய்ய வைப்போம் என மிரட்டுகிறார்கள். இவ்வாறு அதிகாரிகளைக் காட்டி, மிரட்டி வசூலில் ஈடுபடும் கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனறு கூறப்பட்டிருந்தது,.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலையை அதிக விலைக்கு மதுவிற்பனை செய்வதை தடுக்க அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டுள்ளது. அதில் எம்ஆர்பி விலையில் சரக்குகள் விற்பனை என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது அதற்கு கீழ், வாடிக்கையாளர்கள் வரிசையாக வந்து எம்ஆர்பி விலையை சரியாக கொடுத்து சரக்கு வாங்கிச் செல்லவும் என்று போடப்பட்டிருக்கிறது. இந்தபுகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications