வெற்றிவேல்.. வீரவேல்! தமிழ்நாட்டில் “தாமரை” மலர போகிறது - காரைக்குடியில் ஜே.பி.நட்டா நம்பிக்கை
சிவகங்கை: காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்காலம் இருப்பதாகவும், தாமரை தமிழ்நாட்டில் மலரப் போகிறது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தார்.
அன்றில் இருந்தே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சி முழு வீச்சில் இறங்கியுள்ளது. மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்கள் அடிக்கடி தென்னிந்தியா வருகை தருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% நிறைவு.. விரைவில் மோடி திறந்துவைப்பார்.. ஜேபி நட்டா அறிவிப்பு
வெற்றிவேல்
அந்தவகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழர் பாரம்பரியப்படி வேட்டி, சட்டை, துண்டு போட்டு அவர் இதில் கலந்துகொண்டார். விழாவில் பாரத் மாதா கி ஜே, வெற்றி வேல், வீரவேல் என முழக்கமிட்டு அவர் தனது உரையை தொடங்கினார். "இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கையிலும், இங்கு எழுப்பப்படும் கரகோசத்தை காணும்போதும் ஒரு தெளிவான உண்மை எனக்கு தெரிகிறது.
தாமரை மலரும்
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தாமரை மலரப்போகிறது. தமிழ்நாடு புனித பூமி. போர் வீரர்களின் பூமி இது. தமிழ் கலாச்சாரம் மிகவும் பழமையானது. இந்தியாவுக்கு அது பெருமை தேடித் தருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் தமிழ் கவிதையை வாசித்தார். தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் பங்களிப்பை மறக்க முடியாது.
மோடியின் சாதனை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. நீங்கள் இப்போது ஒன்றாக மாஸ்க் அணியாமல் அமர்ந்து இருக்கிறீர்கள். அதற்கு கொரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளே காரணம். அவர்தான் கொரோனா தடுப்பூசி திட்டத்தை கொண்டு வந்தார். இந்தியா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியது.
நரிக்குறவர்கள்
இந்த ஆட்சியில் விவசாயத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டோம். உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்த காலத்தில் நம்முடைய பொருளாதாரம் வளர்ந்துள்ளது. பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் தற்போது மேடைக்கு வந்துள்ளார்கள். அவர்களை பட்டியலினத்தவர்களில் சேர்த்துள்ளோம்.