அநியாயமான போன அஜித்குமார் உயிர்! சிவகங்கையில் சீறிய எச்.ராஜா! ஒன்று திரண்டு நீதி கேட்ட அதிமுக, பாஜக
சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டானின் நடத்திய தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்திருக்கிறார்.. குற்ற உணர்ச்சியே இல்லாமல் முதல்வர் பேசுகிறார், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்று சொல்வதற்கு நா கூசவில்லையா என்றும் கேள்வி எழுப்பியிருந்த எடப்பாடி பழனிசாமி, இன்று அஜித் குமார் மரணத்துக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்.. திருப்புவனத்தில், அதிமுக-பாஜக இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் கோயில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் 27 வயது அஜித்குமார்.

சாமி கும்பிட வந்த நிக்கிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டார்.. அதாவது, கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்தும், அடித்து விசாரித்தபோதும் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
10 பவுன் நகை மாயம்
இதையடுத்து அஜித்குமாரை வேனில் ஏற்றி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் அவர் உயிரிழந்தார்.இதுதொடர்பாக எஸ்பி ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்திய நிலையில், மானாமதுரை குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.. இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
டிரான்ஸ்பர் - சஸ்பெண்ட்
அதேபோல மாவட்ட எஸ்பியாக இருந்த ஆஷிஷ் ராவத்தை சென்னை டிஜிபி அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.. மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த சந்தீஷுக்கு, சிவகங்கை மாவட்ட எஸ்பி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், "மாநிலமே தன் குடிமகனை கொன்றுள்ளது" என கடுமையான கருத்தை முன்வைத்து, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக நீதிவிசாரணை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அரசியல் கட்சிகள் ஆவேசம்
இந்த மரணம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது.. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்..
அந்தவகையில் பாஜகவும் போராட்டத்தை அறிவித்துள்ளது.. அதிமுக - பாஜக இணைந்து அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் அறிவித்திருக்கிறார்..
எச்.ராஜா அதிரடி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்புவனம் திரு.அஜித்குமார் அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு 2.07.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பாஜக - அதிமுக இணைந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் நடத்திய மிருகத்தனமான தாக்குதலால் உயிரிழந்த திரு.அஜித்குமார் அவர்களின் படுகொலையின் பின்னணியில் உள்ள திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும், அஜித்குமார் அவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் 2.07.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக - அதிமுக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல், கிளை நிர்வாகிகள், மற்றும் அணி, பிரிவு பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பாஜக கொடியோடு பெருந்திரளாக வருகைதந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.. திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பம்
அறிவித்தபடியே, அதிமுக, பாஜக இணைந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.. இதனிடையே, இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை மதுரை மாவட்ட நீதிபதி தொடங்கினார்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபடி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்கிறார்.தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரித்த இடங்களுக்கும் நீதிபதி செல்ல உள்ளதாகவும், அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தவும் நீதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலவச பட்டா
இந்நிலையில் திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் பொற்கொடி ஆகியோர் வழங்கினர். இதன்படி அஜித்குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டாவும் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications