திருப்புவனம் அஜித் குமார் மரணம்.. வழக்கு பதிவு செய்த சிபிஐ! நிகிதாவையும் விசாரிக்க வாய்ப்பு?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழக காவல்துறையினரிடம் இருந்து அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103இன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்னர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் அஜித் குமார் என்ற 28 வயது இளைஞர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 27 ஆம் தேதி விருதுநகரை சேர்ந்த பேராசிரியர் நிகிதா என்பவர் அவரது தாயாருடன் மடப்புரம் கோவிலுக்கு காரில் வந்திருந்தார். அப்போது காரை பார்க் செய்ய அஜித் குமாரிடம் நிகிதா உதவி கேட்டுள்ளார்.

இதற்கு எனக்கு கார் ஓட்ட தெரியாது என்றும் நண்பர் ஒருவரை அழைத்து காரை அஜித் குமார் பார்க்கிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் நிகிதாவின் தாய் வீல் சேரில் தான் வர முடியும் என்பதால், அவரை காரில் இருந்து இறக்குவதற்கு அஜித் குமார் மற்றும் அவரது நண்பர் உதவியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தான், காரில் இருந்த 9 பவுன் தங்க நகை மாயமாக போனது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அஜித் குமாரை கைது செய்து அவரிடம் விசாரித்தனர். மேலும் தனிப்படை போலீசாரும் அவரிடன் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் விசாரணையின் போதே அவர் உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் போலீசார் தான் அடித்து கொன்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர். அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜித் குமார் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரிக்கவும் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மேலும் அரசு தரப்பிலும் அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசு வேலையும், அவர்களது குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம் மற்றும் நிலம் வழங்கப்பட்டது. இதற்கிடையே நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணையை முடித்து நீதிபதியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாகவும், அடுத்த வாரத்துக்குள் சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஏற்கனவே தமிழக அரசும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்து இருந்தது. இந்த நிலையில் இன்று அஜித் குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
தமிழக காவல்துறையினரிடம் இருந்து அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103இன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்னர். புகார் கூறிய நிகிதா மீது பல்வேறு பண மோசடி குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும் நிலையில் அவரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பான வழக்குடன், நகை திருட்டு தொடர்பான வழக்கையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க வேண்டும், என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதனால் சிபிஐ இந்த நகை திருட்டு வழக்கிலும் உண்மையை வெளியே கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications