அஜித்குமார் மரண வழக்கில் அடுத்த ஷாக்! சிபிஐ அதிகாரியை சுத்து போட்ட கும்பல்? போலீஸ்காரர்களின் ஆட்களா?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி ஒருவரை தொடர்ந்து ஒரு கும்பல் நோட்டமிட்டு வருவதாக புகார் அளித்த நிலையில் அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்களின் ஆட்கள் அவரை பின் தொடர்ந்திருக்கலாமென கூறப்படும் நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மடப்புரத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தனது தாயுடன் கோவிலுக்குச் சென்றார்.
தொடர்ந்து தங்களது காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென அஜித்குமாரிடம் அந்த பெண் சொன்னதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கூட்ட நெரிசல் காரணமாக தாங்கள் அணிந்திருந்த 10 சவரன் நகையை அந்த பெண்ணும் காரில் வைத்திருந்தாகச் சொல்லப்படுகிறது.

சிவகங்கை அஜித் குமார்
இதற்கிடையே கோவிலுக்கு சென்று விட்டு பார்த்தபோது காரின் பின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 சவரன் நகையை காணவில்லை என அந்த பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார். இதை அடுத்து கோவில் ஊழியர்கள் அஜித்குமாரை திருபுவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். திருபுவனம் குளம் அருகிலும், கோவில் வளாகத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் வைத்து அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
காவல் மரணம்
மேலும் அஜித்குமாரின் சகோதரரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இருந்தபோது அஜித்குமார் உயிரிழந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டர். இந்த நிலையில் அஜித்குமார் மரணம் தமிழக அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை
இதனைத் தொடர்ந்து சிபிஐ டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் விசாரணை நடத்தியதோடு அஜித்குமாரின் சக ஊழியர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் நிகிதா பொய் புகார் கொடுத்திருக்கலாம் என சொல்லப்பட்டது. தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது.
சிபிஐ அதிகாரி
இந்த நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி ஒருவரையே ஒரு கும்பல் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அஜித்குமார் கொலை வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் மீண்டும் டெல்லிக்கே சென்று விட்டனர். இதனையடுத்து மதுரை சிபிஐ அலுவலகத்தில் சப் - இன்ஸ்பெக்டர் அளவிலான சிபிஐ அதிகாரி ஒருவர் தற்போது வழக்கை விசாரித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மர்ம கும்பல் மதுரை சிபிஐ அலுவலகப் பகுதியை ஆட்டோவில் சுற்றி வந்துள்ளனர்.
மர்ம கும்பல்
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே பகுதியில் வலம் வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து தன்னை ஒரு கும்பல் நோட்டமிடுவதை கண்ட சிபிஐ அதிகாரி மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பின்பு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியதாக சொல்லப்படுகிறது. அங்கும் அதே ஆட்டோவில் நான்கு பேர் சுற்றுலா மாளிகையை சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து அந்த சிபிஐ சப் இன்ஸ்பெக்டர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே அஜித்குமார் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்களின் ஆதரவாளர்கள் யாராவது சிபிஐ அதிகாரிகளை நோட்டமிட்டார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications