"முட்டாள்.. மூதேவி” வீடியோ மீட்டிங்கில் திட்டிய உயரதிகாரி.. ஆணையர் சஸ்பெண்ட் - உண்மையான காரணம் என்ன?
சிவகங்கை: தன்னை திட்டிய நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிவகங்கை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காணொலிக் காட்சி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் சிவகங்கை நகராட்சி ஆணையரை நகராட்சி நிர்வாக இயக்குநர் கேவலமாகத் திட்டியுள்ளார். அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆய்வுக் கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்காமல் விடலாம்.. ஆனால் காரணம் சொல்லவேண்டும்- தேர்தல் ஆணையர்
ஆய்வுக் கூட்டம்
நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, நேற்று முன்தினம் இரவு காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி ஆணையர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சிவகங்கை நகராட்சி ஆணையரிடம், சிவகங்கை நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் பங்களிப்பு தொகை இல்லாத திட்ட பணிக்கான முன் அனுமதி ஏன் வழங்கவில்லை என நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா கேட்டுள்ளார்.
கேவலமாக திட்டிய இயக்குநர்
அதற்கு என்ஜினியரிங் பிரிவில் இருந்து ஆவணம் வரவில்லை. அந்த ஆவணத்தை பார்த்து பதில் தருவதாக சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அதற்கு பொறுமை இழந்த பொன்னையா, சிவகங்கை ஆணையரை முட்டாள், மூதேவி எனத் திட்டியுள்ளார். மற்ற நகராட்சி ஆணையர்கள் முன்னிலையில் இப்படி பேசாதீர்கள் என சிவகங்கை ஆணையர் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மேலும் ஆத்திரமடைந்துள்ளார்.
சஸ்பெண்ட்
இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அவசர, அவசரமாக சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொறுப்பு ஆணையராக நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை நகராட்சி ஆணையரை காணொலிக் காட்சி கூட்டத்திலேயே கேவலமாகத் திட்டிவிட்டு அவரை சஸ்பெண்ட் செய்திருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதான் காரணமா
சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த், ஆணையர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மழை நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்களை அகற்றி வருகின்றனர்.
ஆக்கிரமித்திருந்த கடைக்காரர்கள் சிலர் தாங்கள் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையாவின் உறவினர் எனக் கூறியுள்ளார். அதையும் மீறி நடவடிக்கை எடுத்ததால் தான் சிவகங்கை நகராட்சி ஆணையரை குறிவைத்து பழிவாங்கி வருகிறார் பொன்னையா என்கிறார்கள்.