பொன்னியின் செல்வன் அல்ல.. மண்ணில் விழுந்த இளைஞன்! சீன் காட்ட நினைத்து ஜீரோவான ரோமியோ- வெளியான வீடியோ
காரைக்குடி: காரைக்குடி அருகே கல்லூரி மாணவிகள் முன்பு பைக்கில் சாகசம் செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் கீழே தவறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கீழே விழுந்ததுடன் மட்டுமல்லாமல் தற்போது அந்த வீடியோவும் வைரலானதால், சாலையில் சாகசம் செய்த குற்றத்திற்காக போலீஸார் அந்த இளைஞரையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞரை கிண்டல் செய்தும், திட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற இளைஞர்களால் தான் விபத்துகள் நேரிடுவதாகவும் பலர் கூறியுள்ளனர்.
72 - 45 -7.. அமைதியாக காரியத்தை சாதித்த
அதிகரிக்கும் பைக் சாகசம்
சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது திடீரென ஒரு பைக் நம்மை இடிப்பதை போல மின்னல் வேகத்தில் வந்து 'கட்' அடித்து செல்வதை அனைவருமே பார்த்திருப்போம். இதுபோன்று சாலைகளில் சாகசம் செய்யும் இளைஞர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். வீட்டில் பெற்றோரிடம் அழுது புரண்டு பைக் வாங்கும் இவர்கள், அது கையில் கிடைத்ததும் ஏதோ தன்னை ஒரு ஹீரோவாகவே கருத தொடங்கி விடுகின்றனர். கையை எடுத்துவிட்டு பைக்கை ஓட்டுவது; மின்னல் வேகத்தில் வளைந்து நெளிந்து செல்வது; வீலிங் செய்வது போன்ற சேட்டைகளில் ஈடுபடும் இவர்கள், இப்படி செய்தால் தான் இளம்பெண்கள் தங்களை கெத்தாக நினைப்பார்கள் என நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி யாரும் நினைக்க மாட்டார்கள் என அவர்களுக்கு யாரும் புரிய வைப்பதில்லை.
தொடரும் மரணங்கள்
இப்படி நினைத்து சாலையில் பைக் சாகசம் செய்யும் பல இளைஞர்கள், சிறு வயதிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். தினமும் தமிழகத்தில் இதுபோன்ற இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் கஷ்டம் என்னவோ அவர்களின் பெற்றோர்களுக்கு தான். சில நேரங்களில், இந்த பைக் சாகசங்களில் ஈடுபடுவோரால், சாலையில் ஒழுங்காக வரும் வாகன ஓட்டிகளும் விபத்தில் மாட்டி மரணம் அடைகின்றனர். இவர்களை காவல்துறை எவ்வளவோ எச்சரித்தும் சில இளைஞர்கள் திருந்துவதாக இல்லை. தற்போது இதுபோன்று பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை பற்றிதான் பார்க்க போகிறோம்.
மாஸ் காட்டியதாக உணர்ந்த தருணம்
காரைக்குடி அழகப்பா சாலையில் இரு இளைஞர்கள் பைக்கில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தனர். முதலில் ஒழுங்காக சென்று கொண்டிருந்த அவர்கள், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் நிற்பதை பார்த்தனர். மாணவிகளை பார்த்தும் அவர்களுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, பைக் வேகம் எடுக்க ஆரம்பித்தது. அப்போது மேலும் உற்சாக மிகுதியில் பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளைஞர், மாணவிகள் முன்பு மாஸ் காட்டுவதாக நினைத்துக் கொண்டு இருக்கையின் மீது ஏறி நின்றார். ஏறி நின்று மூன்று நொடிகள் தான் ஆகியிருக்கும்.. சட்டென நிலைத்தடுமாறி நடு ரோட்டில் பொத்தென விழுந்தார்.
போலீஸும் தேடுகிறது
எந்த மாணவிகள் முன்பு மாஸ் காட்ட நினைத்தாரோ, அதே மாணவிகளுக்கு அருகில் விழுந்ததால் அவருக்கு அவமானம் தாங்க முடியவில்லை. இந்த சம்பவத்தை அவர்களுக்கு பின்னால் சென்ற வாகன ஓட்டி, தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அவ்வளவுதான். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் இந்த வீடியோ பார்க்கப்பட்டுவிட்டது. பற்றாக்குறைக்கு சில செய்தி சேனல்களிலும் இந்த வீடியோ ஒளிபரப்பானது. இந்த வீடியோவுக்கு கீழே பலரும் அந்த இளைஞரை கிண்டல் செய்து கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த வீடியோ வைரலானதால் இதனை பார்த்த அழகப்பாபுரம் போலீஸார், சாலையில் சாகசம் செய்த அந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.