அம்மா மீதான பாசம்.. சொந்த செலவில் நூலகம் கட்டி தந்த ப சிதம்பரம்.. கவிதை எழுதி பாராட்டிய வைரமுத்து
சிவகங்கை: சிவகங்கை அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு தனது சொந்த செலவில் ரூ.12 கோடி மதிப்பிட்டில் நவீன தமிழ் நூலகத்தை ப சிதம்பரம் கட்டி கொடுத்துள்ளார். இந்த நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்த நிலையில் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, ‛கல்விக்கொடையாக ப சிதம்பரம் வழங்கிய நூலகத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றார். காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை அவர் திறந்து வைத்தார்.

அதேபோல் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த தமிழ் நூலகத்தை கட்டி கொடுத்தவர் ப சிதம்பரம்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருப்பவர் ப சிதம்பரம். இவர் சிவங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். தனது தாய் லட்சுமி நினைவாக இந்த நூலகத்தை ரூ.12 கோடியில் ப சிதம்பரம் கட்டி கொடுத்துள்ளார். இந்த நூலகத்துக்கு லட்சுமி வளர் தமிழ் நூலகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதன்பிறகு விழவில் பங்கேற்றது தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளாதது:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சுமி வளர்தமிழ் நூலகத்தைத் திறந்து வைத்தார்
அது ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கட்டிக் கொடுத்த கல்விக் கொடை
நான் சிறப்புரை செய்தேன்
"கிரேக்க ரோமானிய நாகரிகம்
எகிப்திய நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகம்
சீன நாகரிகம்
என்ற நாகரிகங்களைவிடச்
சுமேரிய நாகரிகமே
சிறந்தது என்கிறார்கள்
வரலாற்று வல்லுநர்கள்
ஏனென்றால்
சுமேரிய மன்னன்
சென்னா செர்ஃப் என்பவன்தான்
அரசு ஆணைகளைக்
களிமண் தகடுகளில் சுட்டு
ஆவணப்படுத்தினான்;
அதுதான் முதல் நூலகம்
அவன் உண்டாக்கிய
ராயல் லைப்ரரியைக் கண்டுதான்
அலெக்ஸாண்ட்ரியாவில்
அலெக்சாண்டர்
நூலகத்தை ஏற்படுத்தினான்
நூலகம்
நாகரிகத்தின் உச்சம்
தமிழர்களே!
இந்த நூலகத்தையும்
பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நான்கூட ஒரு
நூலகப் பறவைதான்;
இல்லையென்றால்
அரிவாள்களோடும்
கடப்பாரைகளோடும்
கழிந்திருக்கும் என் வாழ்வு" என்று கூறியுள்ளார்.
இந்த நூலகம் என்பது செட்டிநாடு கட்டடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம், முதல்தளத்தில் முற்றிலுமாக ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. உள்ளரங்கு, பிரமாண்ட வரவேற்பரை, மின்விசிறி வாசிப்பு மேஜைகள் உள்ளன. கீழ்தளத்தில் தொல்காப்பியர் அரங்கம் உள்ளது. 200 பேர் வரை அமரும் இருக்கை வசதி உள்ளது. இணையதள வசதி என்பது உள்ளது.
31 ஆயிரம் சதுர அடியில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. 2021 செப்டம்பர் மாதம் ப சிதம்பரம், கார்த்தி ப சிதம்பரம், பல்கலைக்கழக துணை வேந்தர் வி உள்ளிட்டவர்கள் பூமிபூஜை செய்து தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications