அதிக விலைக்கு மதுவிற்பனை.. டாஸ்மாக் கடையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு..இளைஞர் வெறிச்செயல்
மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை: காரைக்குடி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் அரசு மதுபான கடையில் 2வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததால் இளைஞர் ஒருவர் வெறிச்செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு பண்டிகையின் போதும், பல வியாபாரங்கள் சுறுசுறுப்பாகவும், சில வியாபாரங்கள் மந்தமாகவும் மாறி மாறி நடைபெறும். ஆனால் எப்போதும் டாஸ்மாக் கடைகளின் மது விற்பனை படு ஜோராகவே நடைபெற்று வருகிறது.
கடந்த பண்டிகையின் போது டாஸ்மாக் விற்பனை கணக்கே தலைப்பு செய்திகளாக வரும். அந்த அளவிற்கு மதுபான விற்பனை அதிகரித்து வருகிறது.

டாஸ்மாக் விற்பனை
ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் அதிகமாகவே இருந்து வரும் சூழலில், ஊழியர்கள் தங்கள் பங்கிற்கு கூடுதல் விலைக்கு மதுவை விற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீதும் கொடுப்பதில்லை. சில கடைகளில் பில் புக்கை தேடி பிடித்து தருவதும், சில கடைகளில் கூட்டமாக இருப்பதால் பில் தருவதில் சிரமம் இருப்பதாக கூறி குடிமகன்களை அனுப்புவதையும் பார்க்க முடியும்.

விதிமீறல்
அதேபோல் போலி மதுபான விற்பனை, நடு ராத்திரியிலும் கடையை அடைக்காமல் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அரசு நிர்ணயித்த விலையை விடவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அனைத்து கடைகளும் இதுபோல் இல்லை என்றாலும், சில கடைகளில் விதிகள் மீறப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளித்தூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இளைஞர் ஒருவர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதலில், டாஸ்மாக் ஊழியர் அர்ஜூனன் என்பவர் படுகாயமடைந்துள்ளார். டாஸ்மாக் மதுபான விற்பனை முடித்துவிட்டு, கணக்கு பார்த்துக் கொண்டிருந்த போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

2ம் முறை
இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அர்ஜூனன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சில வாரங்களுக்கு முன் இதே டாஸ்மாக் கடையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், மீண்டும் இளைஞர் ஒருவர் வெறிச்செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications