பற்றி எரிந்த பத்ரகாளியம்மன் கோவில் கோபுரம்.. பதறிப்போன சிவகாசி மக்கள்..ஏதேனும் அபசகுனமா?
சிவகாசி: கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வந்த பத்ரகாளியம்மன் கோவில் கோபுரம் பற்றி எரிந்தது சிவகாசி மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. திருமண விழாவிற்கு பட்டாசு வெடித்த போது அந்த தீப்பொறி பட்டு கோவில் கோபுரத்தின் மீது கட்டப்பட்டிருந்த சாரம் பற்றி எரிந்துள்ளது.
சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வண்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டதுடன், வண்ண வேலைபாடுகளை பார்க்க முடியாதபடி கோபுரத்தின் உச்சிப்பகுதியை பச்சை நிற துணிகளை வைத்து மறைத்திருந்தனர்.
பத்ரகாளியம்மன் கோவில்
பழமையான பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக சீர் வரிசைகள் கொண்டு செல்லும் பொழுது பட்டாசு வெடித்துள்ளனர்.
பற்றி எரிந்த கோபுரம்
அதில் மேலே சென்று வெடித்த பட்டாசு ஒன்று ராஜகோபுர சாரத்தின் மேல் விழுந்ததில் தீ பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் சாரம் முழுவதும் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பதறிப்போன பக்தர்கள்
பத்ரகாளியம்மன் கோவில் ராஜ கோபுரம் பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி பக்தர்கள், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அபசகுனமா?
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோவில்களில் பல விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. தேரோட்டத்தின் போது தேர் சாய்ந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவில் கோபுரத்தின் கும்பாபிஷேக பணிகளுக்கான வர்ணம் பூசப்பட்டு வரும் நிலையில் நிகழ்ந்துள்ள தீ விபத்து அபசகுனமாக இருக்குமே என்ற அச்சத்தை சிவகாசி மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசு தொழிலுக்கு ஆபத்தா?
பட்டாசு நகரம் என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும் நகரம் சிவகாசி. இங்கு தயாராகும் பட்டாசுகள் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பட்டாசு தொழில் சற்றே மந்த நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் கோபுரத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து பட்டாசு, அச்சுத் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே என்ற அச்சத்தை சிவகாசி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.