ரியல் "சக்தே இந்தியா".. வாய்ப்பு தராத இந்திய ஆண்கள் அணி.. மகளிர் அணியை வெல்ல வைத்த கோச் மஜும்தார்!
சென்னை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக உலகக்கோப்பை பைனல் போட்டியில் வெற்றிபெற அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தார் முக்கிய காரணமாக உருவெடுத்து உள்ளார். மோசமான நிலையில் இருந்த அணியை மீட்டு, ஒவ்வொரு வீராங்கனைக்கும் தனிப்பட்ட பிளான்களை வகுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமோல் மஜும்தார் மாறி விட்டார்.
இந்திய கிரிக்கெட் உலகில் நீண்ட காலமாகப் போற்றப்படும் நபர்தான் அமோல் மஜும்தார், இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெறாத தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

யார் இந்த அமோல் மஜும்தார்?
ஒரு காலத்தில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று தீவிரமாக நம்பப்பட்டவர் அமோல் மஜும்தார். மும்பைக்காக தனது ரஞ்சி டிராபி அறிமுகப் போட்டியில் 260 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம், அடுத்த பெரிய பேட்டிங் நட்சத்திரமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி, 11,000-க்கும் மேற்பட்ட முதல் தர ரன்களைக் குவித்து, நிலைத்தன்மைக்கும் தரமான ஆட்டத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
அமோல் மசும்தார், 1994 முதல் 2013 வரை இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு புகழ்பெற்ற பெயராக இருந்தார். அவர் 171 முதல் தரப் போட்டிகளில் பங்கேற்று, 48 சராசரியுடன் 11,167 ரன்களை குவித்தார். இதில் 30 சதங்களும் 60 அரைசதங்களும் அடங்கும். அவரது சிறந்த ஆட்டத்திறன் இருந்தபோதிலும், இந்திய தேசிய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு ஒருபோதும் ஈடேறவில்லை. இது அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு பெரிய ஏக்கத்தையே ஏற்படுத்தியது.
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை
துரதிர்ஷ்டவசமாக அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அமையவில்லை. ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன் மற்றும் சவுரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்திய இந்திய மிடில் ஆர்டரின் உச்சகட்ட காலகட்டத்தில் மஜும்தாரின் கிரிக்கெட் வாழ்க்கை அமைந்தது. இதனால், அபாரமான சாதனைகள் படைத்தபோதிலும், அவருக்கு இந்திய டெஸ்ட் தொப்பியை அணியும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2014-ஆம் ஆண்டு, 21 ஆண்டுகள் நீடித்த அற்புதமான உள்ளூர் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, இந்தியாவிற்காக ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடாமலேயே மஜும்தார் ஓய்வு பெற்றார்.
பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு கிரிக்கெட் மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்தது. அந்த வாய்ப்பு.. கிரிக்கெட் வீரராக இல்லை.. பயிற்சியாளராக! இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அமோல் மஜும்தார் வாய்ப்பை பெற்றார்.
இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அமோல் மஜும்தார் அசத்தல்
அணிக்கு வந்த பின் ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட பிளான்களை வகுத்தார். தனிப்பட்ட வகையில் பவுலிங் யூனிட்டிற்கு தனி பிளான், பேட்டிங் யூனிட்டிற்கு தனி பிளான், ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பும் சிறப்பு strategy என்று அணியை மொத்தமாக மாற்றினார். முக்கியமாக முன்பு இந்திய பெண்கள் அணியிடம் இல்லாத நம்பிக்கையை மீண்டும் கொண்டு வந்தார். இது அணி ஆடும் விதத்தையே மாற்றியது.
விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டு
அவரது கதை விடாமுயற்சி, பொறுமையின் ஒரு எடுத்துக்காட்டாகப் போற்றப்படுகிறது. இந்தியாவிற்காக விளையாடும் கனவு நழுவிப் போனாலும், அவரது திறமையும் அர்ப்பணிப்பும் ஒருபோதும் மங்கவில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்களும், ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். அந்த திறமைதான் இந்திய அணி கோப்பை வெல்லவும் காரணமாக அமைந்து இருந்தது.
சமூக ஊடகங்களில், ஷாருக்கான் நடித்த சக் தே இந்தியா திரைப்படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரத்துடன் இவரின் வாழ்க்கையை பல ரசிகர்கள் இதை ஒப்பிட்டனர். தற்செயலாக, ஷாருக்கான் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடிய நாளன்று மஜும்தாரின் இந்த சாதனை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் இருந்து, பயிற்சியாளராக உலகக் கோப்பையை வென்றது வரை, அமோல் மஜும்தாரின் பயணம், கனவுகளைத் துரத்துவதை ஒருபோதும் நிறுத்தாதவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது.












Click it and Unblock the Notifications