குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!
மும்பை: 6 மாதங்களுக்கும் மேலாக குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இருப்பதாக இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 35 வயதாகிவிட்டதாக கூறிய சாஹல், இனி தனது அணிக்காக 150% உழைப்பை கொடுக்கவே இப்படியான கட்டுப்பாடுகளை எனக்கு நானே விதித்து கொண்டதாக கூறியுள்ளார்.
இந்திய அணியில் இருந்து சாஹல் நீக்கப்பட்டிருந்தாலும், ஐபிஎல் தொடரில் தவிர்க்க முடியாத வீரராக சாஹல் வலம் வருகிறார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் சாஹல், இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனிடையே சாஹல் அவரின் மனைவி தனாஸ்ரீ வர்மாவை பிரிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் யூடியூப் சேனலுக்கு சாஹல் அளித்துள்ள பேட்டியில், தற்போது குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன். குடியை நிறுத்தி 6 மாதமாகிவிட்டது. இப்போது கூடுதல் எனர்ஜியுடன் செயல்பட முடிகிறது. என்னுடைய அணிக்காக 150% உழைப்பை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒரு சீனியர் வீரராக என்னிடம் இருந்து ஏதாவது ஒரு விஷயத்தை ஜூனியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டோம். கடைசி நேரத்தில் மார்கோ யான்சனால் அணிக்கு திரும்ப முடியவில்லை. அவர் இருந்திருந்தால், எங்களால் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்க முடியும்.
மார்கோ யான்சன் மிகச்சிறப்பாக பவுலிங் செய்து வந்தார். பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். ஃபினிஷராக இறங்கி சிக்ஸ் அடித்து மிரட்டுகிறார். பேட்டிங்கை விடவும் பவுலிங்கில் இன்னும் திறமையாகவும், நம்பிக்கையுடனும் செயல்படுகிறார். இதனால் இம்முறை தொடக்க வீரர்கள் யான்சனை எதிர்கொள்வது எளிதாக இருக்காது.
அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரில் என்னால் முழு திறமையையும் வெளிப்படுத்த முடியவில்லை. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் சிறிது காயம் ஏற்பட்டது. அதனால் பிளே ஆஃப் போட்டிகளில் என்னால் முழுமையாக செயல்பட முடியவில்லை. அதன் காரணமாகவே என்னுடைய உடல் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற எண்ணமே வந்தது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications