யார் அந்த பெண்? சிஎஸ்கே ஏல மேடையில் முதல்முறையாக நடந்த மாற்றம்.. அதிர்ஷ்டத்தை கொண்டு வருவாரா
அபுதாபி: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் தொடங்கி இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் டேபிளில் அமர்ந்திருக்கும் பெண் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் டேபிளில் அமர்ந்திருக்கும் பெண் யார்? அவருக்கும் சிஎஸ்கே அணிக்கு என்ன சம்பந்தம் என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முறை சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் அதிக தொகையுடன் களமிறங்கி இருக்கின்றன. சிஎஸ்கே அணி தரப்பில் ரூ.43.40 கோடி கையிருப்பில் உள்ளது. இதனை வைத்து சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை வாங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி வழக்கம் போல் மிக்சர், பாதம் பருப்புடன் ஏலத்தில் பங்கேற்றுள்ளது. இம்முறை சிஎஸ்கே அணியின் ஏலத்தில் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், அனலிஸ்ட் ஏஆர் ஸ்ரீகாந்த் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் சிஎஸ்கே அணியில் ஏல டேபிளில் முதல்முறையாக ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளார்.
18 சீசன்களில் ஒரு முறை சிஎஸ்கே அணி பெண் நிர்வாகியுடன் பங்கேற்றதில்லை. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்களிடையே யார் அந்த பெண் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. அது வேறு யாரும் அல்ல.. சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் தான். அதாவது சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா.
கடந்த 2 சீசன்களாகவே ரூபா குருநாத் தான் சிஎஸ்கே அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார். அதேபோல் சிஎஸ்கே அணியின் முதலீடுகளிலும் ரூபா தான் முடிவு எடுத்து வருகிறார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக்கப்பட்டதற்கு பின்னணியிலும் ரூபாவே இருந்ததாக சொல்லப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ20 லீக் தொடரிலும் ரூபா ஏலத்தில் டேபிளில் அமர்ந்திருந்தார்.
தற்போது ஐபிஎல் ஏலத்திலும் சிஎஸ்கே அணியின் உரிமையாளராக பங்கேற்றுள்ளார். இதனால் கூடுதம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்த பின், சிஎஸ்கே அணியை முழுமையாக கட்டுப்படுத்தி வரும் நிர்வாகியாக ரூபா மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications