இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. ஒரு டிக்கெட் விலை ரூ.2.96 லட்சம் மட்டுமே.. ஆனாலும் சோல்ட் அவுட்!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்கு ஒரு டிக்கெட் விலை ரூ.2.96 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அத்தனை டிக்கெட்டுகளும் அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நாளைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தும் பட்சத்தில், இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியை எளிதாக வெளியேற்றிவிட முடியும். இதனால் இந்திய அணி ரசிகர்கள் நாளைய ஆட்டத்தை காண்பதற்கு தீவிரமாக இருக்கின்றனர். இந்த ஆட்டம் துபாய் மைதானத்தில் நடப்பதால், பாகிஸ்தான் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
ஏனென்றால் துபாய் மைதானமும் கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணிக்கு சொந்த மைதானத்தை போன்றதுதான். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நிகராக பாகிஸ்தான் அணி ரசிகர்களும் மைதானத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடந்து வரும் போட்டிகளுக்கு எதிர்பார்த்த அளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை.
இதனால் பலரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட் இருக்கிறதா என்று சோதனை செய்து வருகின்றனர். ஆனால் அப்படி சோதனை செய்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்குவதற்காக ஆன்லைனில் மட்டும் 1.40 லட்சம் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதனால் டிக்கெட் விற்பனை தொடங்கிய 30 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. குறைந்தபட்ச டிக்கெட் விலையாக இந்திய மதிப்புபடி ரூ.11,863க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சொகுசு டிக்கெட்டுகளின் விலையாக ரூ.2,96,595க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ரசிகர்கள் அசராமல் அனைத்து டிக்கெட்டுகளையும் பெற்றுள்ளனர்.
வழக்கமாக எந்த நாட்டில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்றாலும், இந்தப் போட்டிக்குதான் டிக்கெட் கிராக்கி ஏற்படும். அந்த வகையில் தற்போது டிக்கெட் பெற்றவர்கள் பலரும் கள்ளச்சந்தையில் லட்சக்கணக்கில் விலை நிர்ணயம் செய்து டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications