மீண்டும் அதே சம்பவம்.. பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்.. என்ன நடந்தது?
கொழும்பு: பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் மீண்டும் கைகுலுக்க மறுத்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆசியக் கோப்பை தொடர் முதலே இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து வருகின்றனர். இது டி20 உலகக்கோப்பை தொடரிலும் தொடர்ந்து வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்குவார்களா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய போதும், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் இந்திய அணி வீரர்கள் தவிர்த்தனர்.

அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் மோசின் நக்வியிடம் இருந்து ஆசியக் கோப்பையை பெற முடியாது என்றும் கூறினர். இது சர்ச்சையாகியது. இருப்பினும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த நடைமுறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்திய வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூட இந்திய வீரர்களின் நிலைப்பாடு சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் டாஸ் போடுவதற்காக கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா களமிறங்கினர். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா டாஸ் வென்றார். இதன்பின் அவருடன் கைகுலுக்க மறுத்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விலகி நின்றார். இதனால் இந்திய அணியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கொழும்பு மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் முதல் புள்ளியிலேயே நெருப்பு பற்றி இருப்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணியிடம் ஒரேயொரு முறை மட்டுமே இந்திய அணி தோல்வி அடைந்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி சர்ப்ரைஸ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications