16 போட்டிகள், 3 மைதானங்கள்.. சேப்பாக்கத்தில் நடக்கப்போகும் ஐபிஎல் தொடர்.. பிசிசிஐ முடிவு என்ன?
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தென்னிந்தியாவின் சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய மைதானங்களில் நடத்த பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊர் புறப்பட்டுள்ளதால், மீண்டும் உடனடியாக ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனை இந்தியா முன்னெச்சரிக்கையாக முறியடித்து பதிலடியை கொடுத்து வருகிறது. இதன் காரணமாக தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் - டெல்லி இடையிலான ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரே ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் அனைவரும் தங்களது நாடுகளுக்கும், இந்திய வீரர்கள் தங்களின் வீடுகளுக்கும் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தரம்சாலா, அகமதாபாத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அல்லாமல், முழுக்க முழுக்க தென்னிந்தியாவிலேயே ஐபிஎல் தொடரை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசுடன் பிசிசிஐ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே பிசிசிஐ ஐபிஎல் தொடர் குறித்து முடிவு எடுக்க முடியும். இதனிடையே வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய வீரர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டால், மீண்டும் வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஒரு வாரத்தில் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டால், எப்போது முடிக்கப்படும் என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே ஐபிஎல் தொடர் முடிவடைந்திருக்க வேண்டும். இதனால் ஐபிஎல் தொடருக்கான விண்டோ அதிகரிக்கப்பட்டால், வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஐபிஎல் தொடர் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications