டெத் பவுலிங் + பவர்பிளே பேட்டிங்.. இரண்டிலும் கோட்டைவிட்டோம்.. தோல்வி குறித்து ரிஸ்வான் சோகம்!
கராச்சி: நியூசிலாந்து அணியை 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்த தவறியதே இந்த போட்டியின் தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். டெத் பவுலிங் மற்றும் பவர் பிளே பேட்டிங் ஆகிய இரண்டிலும் சொதப்பியதாக கூறிய அவர், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருவதாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 320 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 260 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தனது முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்ததாக பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேசுகையில், நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சிறந்த இலக்கை நிர்ணயித்தார்கள். அதுபோன்ற இமாலய இலக்கை நிர்ணயிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் 260 ரன்களுக்குள் நிறுத்திவிடுவோம் என்றுதான் நினைத்திருந்தோம். நாங்கள் எங்களால் முடிந்த அத்தனை விஷயங்களை செய்து முயற்சித்தோம்.
இருந்தாலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இலக்கை எட்டினார்கள். இந்த பிட்சை பார்த்த போது, பேட்டிங்கிற்கு எளிதாக இருக்காது என்றே கருதினோம். ஆனால் யங் மற்றும் லேதம் இருவரும் இணைந்து பேட்டிங் செய்வதை எளிதாக நினைக்க வைத்துவிட்டார்கள். நாங்கள் அதே தவறை மீண்டும் செய்திருக்கிறோம். லாகூரில் என்ன தவறு செய்தோமோ அதே தவறை செய்தோம்.
அதேபோல் பேட்டிங்கிலும் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. ஃபக்கர் ஜமானின் காயம் குறித்து முழுமையாக தெரியவில்லை. அவரின் ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் என்ன என்று தெரியவில்லை. இந்த போட்டியில் 2 முறை எங்களுக்கு சாதகமான சூழல் இருந்தது. டெத் ஓவர் பவுலிங் மற்றும் பவர் பிளே பேட்டிங் என்று இரண்டிலும் ஆட்டத்தை கோட்டைவிட்டுவிட்டோம். இந்த தோல்வி ஏமாற்றம்தான். சாதாரணமாக விளையாடி இருக்கிறோம். அடுத்த போட்டிகளில் நன்றாக ஆடுவோம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications