ரூ.15,300 கோடி.. ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்.. பின்னணியில் வால்மார்ட்!
மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான கல் சோமானி ரூ.15,300 கோடிக்கு வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக கல் சோமானி உடனான ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் அணிகளின் பங்குகளை விற்பனை செய்வது வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஆண்டு குஜராத் அணியின் 67 சதவிகித பங்குகளை சிவிசி கேபிட்டல்ஸ் நிறுவனம் விற்பனை செய்தது. இதனை டொரண்ட் குரூப் கைப்பற்ற, சிவிசி கேபிட்டல்ஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை எட்டியது. அதேபோல் ஆர்சிபி அணியையும் விற்பனை செய்ய டியாகோ நிறுவனம் தயாராகிவிட்டது.

மறுபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் விற்பனை செய்ய அந்த அணியின் அத்தனை பங்குதாரர்களும் ரெடியாக உள்ளனர். ராஜஸ்தான் அணியின் 65% பங்குகளை மனோஜ் படாலே கையில் வைத்துள்ளார். மீதமுள்ள பங்குகளை ரெட்பேர்ட் கேபிட்டல்ஸ் பார்ட்னர்ஸ், லச்லான் முர்டோச் உள்ளிட்டோர் வாங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முதலே ராஜஸ்தான் அணியின் முழு பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டு, நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன்பின் ஆதித்யா பிர்லா. டேவிட் பிளிட்சர், மிட்டல் குரூப் என்று பலரும் வாங்க ஆர்வம் காட்டியதாக தெரிய வந்தது. ஆனால் இறுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான கல் சோமானி ரூ.15,300 கோடிக்கு ராஜஸ்தான் அணியின் 100% பங்குகளையும் வாங்கி இருக்கிறார்.
கல் சோமானி டேட்டா, கல்வி, ஏஐ, ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்திருப்பவர். இவர் 2021ஆம் ஆண்டிலேயே ராஜஸ்தான் அணியின் சில பங்குகளை வாங்கி இருக்கிறார். அதன்பின் நாளுக்கு நாள் ராஜஸ்தான் அணி அடைந்து வரும் வளர்ச்சி, ஐபிஎல் தொடரின் வளர்ச்சியை பார்த்து, முழுமையாக கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.
கல் சோமானியின் பின்னணியில் வால்மார்ட் குடும்பம் இருப்பதாக தெரிகிறது. வால்மார்ட் நிறுவனத்தின் ராப் வால்டன் ஆதரவாக இருப்பதால், கல் சோமானி பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்வது தெரிய வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடர் மீது அமெரிக்கா தொழிலதிபர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications