க்ருனால் பாண்டியா வீசிய 4 ஓவர்.. ஆர்சிபி கோப்பையை வெல்ல காரணமே அதுதான்.. ஆட்டமே மாறிப்போச்சு!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நட்சத்திர ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா காரணமாக மாறி இருக்கிறார். 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 6 ஓவர்கள் முடிவில் 55 ரன்களை சேர்த்தது.

அப்போது உடனடியாக க்ருனால் பாண்டியா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். முதல் ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த க்ருனால் பாண்டியா, மீண்டும் 9வது ஓவரை வீச வந்த போது பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 11 மற்றும் 13 ஆகிய ஓவர்களை வீசிய க்ருனால் பாண்டியா, கடைசியில் ஜோஷ் இங்லிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பின் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த ஆட்டமும் ஜோஷ் இங்லிஸ் கைகளிலேயே இருந்தது. அவரை வீழ்த்திய பின் ஆர்சிபி அணியின் கைகள் ஓங்கியது. அதுமட்டுமல்லாமல் அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெடுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதனால் ஆட்டத்தில் ஆர்சிபி அணி கம்பேக் கொடுக்க முக்கிய காரணமாக க்ருனால் பாண்டியா அமைந்தார். பேட்டிங்கில் பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை என்றாலும், க்ருனால் பாண்டியா ஒவ்வொரு முறை பவுலிங் செய்ய வரும் போதும், ஆர்சிபி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்த சீசனில் மொத்தமாக 17 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
எப்போதெல்லாம் க்ருனால் பாண்டியா சிறப்பாக பவுலிங் செய்துள்ளாரோ, அப்போதெல்லாம் ஆர்சிபி அணி வெற்றியை பெற்றுள்ளது. க்ருனால் பாண்டியாவை ஏலத்தில் வாங்கிய போது பலரும் கிண்டல் செய்த நிலையில், தற்போது ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications