தோனி கொடுத்த உத்வேகம்.. 3 மணி நேரத்தில் வாழ்க்கை மாறிவிட்டது! பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக் நெகிழ்ச்சி
கொழும்பு: எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமே தாம் மீண்டும் கிரிக்கெட்டை நோக்கி திரும்ப முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எங்கோ ஒரு டிக்கெட் பரிசோதகராக பணியாற்றிய தோனியால் சாதிக்க முடியும் என்ற போது, என்னாலும் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அந்த திரைப்படம் விதைத்ததாக தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்திய பேட்ஸ்மேன்கள் பிரத்யேக பயிற்சியை மேற்கொண்டனர். அவர் பந்துவீசுவதற்கு முன்பாக கொடுக்கும் ஒரு "பாஸ்" பேட்ஸ்மேன்களை சிந்திக்க வைக்கிறது. இதனால் அவரின் பவுலிங்கை அவ்வளவு எளிதாக அட்டாக் செய்ய முடியவில்லை.

28 வயதாகும் உஸ்மான் தாரிக், டி20 யுகத்தில் புதிய ஸ்டைலை அறிமுகம் செய்திருக்கிறார். ஐசிசியின் பரிசோதனைக்கு 2 முறை சென்ற போதும், விதிகளுக்கு உட்பட்டே பந்துவீசுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் உஸ்மான் தாரிக்கை பலரும் பின்பற்ற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய உத்வேகமாக தோனி இருப்பதாக உஸ்மான் தாரிக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உஸ்மான் தாரிக் பேசுகையில், எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை கண்ட பின்னரே நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை நோக்கி திரும்பினேன். தோனியின் கதையும் என்னுடைய கதையுடன் அதிகமாக ஒத்துப்போனது. அவரும் கிரிக்கெட் வீரராக உருவாகுவதற்கு முன்பாக ஒரு பணியை செய்து வந்திருக்கிறார்.
நானும் அப்படியான ஒரு வேலையை தான் செய்தேன். ஆனால் தோனி அப்படியொரு சூழலில் இருந்து எவ்வளவு பெரிய உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். அதனை பார்த்த பின் எனக்குள் உத்வேகம் கிடைத்தது. என்னாலும் சாதிக்க முடியும் என்று நம்பினேன். அந்த சாதனையை செய்ய கடினமாக உழைக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அது கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க ஊக்கமாக அமைந்தது.
தோனி தான் என்னுடைய ரோல் மாடல். இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு நாங்கள் செய்த தவறுகள் முக்கிய காரணம். என்ன மாதிரியான தவறுகளை செய்தோம் என்று தெரியும். அதனை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். எங்களின் தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களை ஏமாற்றி இருக்கலாம். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications