திலக் வர்மாவுக்கு வைக்கப்படும் டெஸ்ட்.. என்சிஏவில் கண் வைத்திருக்கும் கம்பீர்.. கம்பேக் கொடுப்பாரா?
மும்பை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும் என்று தெரிகிறது. இந்திய ஏ அணி விளையாட உள்ள பயிற்சி போட்டியில் திலக் வர்மாவால் முழுமையாக விளையாட முடிந்தால், அவர் இந்திய அணியுடன் இணைவார் என்று சொல்லப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கை மண்ணில் நடக்கவுள்ளது. இந்திய அணி டிஃபெண்டிங் சாம்பியனாக களமிறங்க உள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனிடையே உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது திடீரென நட்சத்திர வீரர் திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக திலக் வர்மா உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அதேபோல் நியூசிலாந்து டி20 தொடருக்கு முதல் 3 போட்டிகளில் மட்டும் திலக் வர்மா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி 2 போட்டிகளின் போது அவர் திரும்பிவிடுவார் என்று சொல்லப்பட்டாலும், அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. திலக் வர்மா முழுமையான பயிற்சியில் ஈடுபட்டாலும், அவர் இன்னும் முழு ஃபிட்னஸ்ஸை எட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய ஏ அணி வீரர்களுக்கு இடையில் ஒரு போட்டி நடத்தப்பட உள்ளது. அந்தப் போட்டியில் திலக் வர்மா விளையாட இருக்கிறார். இந்தப் போட்டியில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ரியான் பராக், மயங்க் யாதவ் உள்ளிட்டோரும் விளையாட உள்ளனர்.
இந்த ஆட்டம் இன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் திலக் வர்மாவின் செயல்பாடுகளை பொறுத்தே அவருக்கு ஃபிட்னஸ் சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது. அதேபோல் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு முன்பாக திலக் வர்மா இந்திய அணியில் இணைவார் என்றும் சில தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications