ஐபிஎல்தான் காரணம்னா.. இவர் சொதப்புனது ஏன்? முதல்ல டீமை விட்டு தூக்குங்க.. இந்திய அணியில் பரபரப்பு
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பி வரும் நிலையில் முக்கியமான ஒரு வீரரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்துவது போல காணப்பட்ட இந்திய அணி முதல் நாள் இறுதியிலும், இரண்டாம் நாள் இறுதியிலும் கடுமையாக சொதப்பி உள்ளது.

முக்கியமாக ஸ்மித், ஹெட் இருவரும் வேதாளம் போல இந்திய பவுலர்கள் முதுகில் தொங்கிக்கொண்டு இறங்காமல் நாள் முழுக்க ஆட்டம் காட்டினார்கள். நம்முடைய பவுலர்களும் எல்லா குறளி வித்தையும் காட்டி பார்த்தும்..குட்டி கரணம் அடித்து பார்த்தும் ஹெட் - ஸ்மித் விக்கெட்டை எடுக்கவே முடியவில்லை.
முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டிற்கு 469 ரன்களை எடுத்தது. ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை எடுத்தனர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் பவுலிங் முதல் இரண்டு செஷன் சிறப்பாக இருந்தது. ஆனால் அதன்பின் மோசமாக சொதப்ப தொடங்கியது.
இதில் சிராஜ் போக ஷரத்துல் ஷமி சிறப்பாக பவுலிங் செய்தனர். உமேஷ் யாதவ் அதிக ரன்களை கொடுத்தார். அஸ்வின் இல்லாமல் இந்திய அணி திணறுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 26 பந்துக்கு 15 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 15 பந்துக்கு 13 ரன்கள் எடுத்து சுப்மான் கில் அவுட் ஆனார். 25 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார். 31 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார்.
அதிரடியாக ஆடிய ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி மோசமாக சொதப்புவதற்கு காரணம் ஐபிஎல்தான் என்று கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சரியான ஓய்வு இல்லாமல் வீரர்கள் ஆடுவது, அதிக பணத்திற்காக பிசிசிஐ தொடர்ந்து வீரர்களை ஆட வைப்பது போன்றவை காரணங்களாக பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ஐபிஎல்லில் புஜாரா ஆடவில்லை. அவர் அந்த காலம் முழுக்க கவுண்டியில் டெஸ்ட் ஆடினார். இங்கிலாந்து பிட்சில் பழக்கம் உள்ளது. அதேபோல் மற்ற நேரங்கள் முழுக்க டெஸ்ட் போட்டிகளுக்கே தயார் ஆனார். ஆனால் இவ்வளவு செய்தும் அவர் மோசமாக ஆடி உள்ளார்.
கடைசியாக அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியது 2022 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் மட்டுமே. இடையில் எங்கும் புஜாரா சரியாக ஆடவில்லை. நேற்றும் கூட 25 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார்.
மற்ற வீரர்கள் சொதப்பி ஐபிஎல் காரணம் என்றால் புஜாரா சொதப்ப என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அவரை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications