உலகக்கோப்பை ஃபைனலில் ஸ்பெஷல் நிகழ்வு.. சாம்பியன் கேப்டன்களுக்கு கௌரவம்.. அடடா.. அவரை மட்டும் காணோமே!
அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது இதுவரை உலகக் கோப்பை வென்ற அணிகளின் கேப்டன்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். சாம்பியன் அணிகளின் கேப்டன்களில் இம்ரான் கான் மட்டும் விடுபட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய ஐசிசி 13-வது 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடைய இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

நடைபெற்ற முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணியானது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை (நவம்பர் 19ஆம் தேதி) இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
ஏற்கனவே 5 முறை உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா, 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. இதுவரை 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளதோடு, இந்த முறை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இந்தியா, 2003 ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த 50 ஓவர் உலககோப்பை தொடரில் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண மைதானத்திற்கு நேரில் வருவார் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் இந்தியா வருகை தந்து இந்த ஆட்டத்தை நேரில் காண உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு அன்றைய தினம் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற சூர்ய கிரண் ஏரோபாட்டிக்ஸ் குழு விமான கண்காட்சியை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த உலகக் கோப்பையின் நிறைவு விழாவில் இதுவரை ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற அணிகளின் கேப்டன்களை தொடரை நடத்தும் நாடு என்ற வகையில் பிசிசிஐ கௌரவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உலகக் கோப்பைகளை தங்களுடைய நாட்டுக்கு வென்று கொடுத்த கேப்டன்களுக்கு ஸ்பெஷல் பிளேசரை அணிவித்து பிசிசிஐ கௌரவிக்க உள்ளது. இந்த நிகழ்வு இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் நடைபெற உள்ளது.
1975, 1979 உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் க்ளைவ் லாய்ட், 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ், 1987 கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர், 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கையின் அர்ஜுன ரணதுங்கா, 1999 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், 2003, 2007 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியாவுக்கு வென்ற ரிக்கி பாண்டிங், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் எம்எஸ் தோனி, 2015 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், 2019 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கன் ஆகியோரை பிசிசிஐ கௌரவிக்க உள்ளது.
ஆனால் இதில், 1992 உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் கான் இடம்பெறவில்லை. ஐசிசி வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் இம்ரான் கான் படம் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளால் தற்போது சிறையில் இருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான். எனவே, அவரது படம் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது. மற்ற சாம்பியன் கேப்டன்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications