பிரபாகரன் பிறந்த ஊரில் பட்டம் திருவிழா: உதயசூரியன் கடற்கரையில் பறந்த தாஜ் மகால்
யாழ்பாணம்: பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் வண்ண வண்ண வித விதமான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டதை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடத்தப்படும் பட்டப் போட்டிகள் 1994ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்தால் நடத்தப்பட்டு, நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக கைவிடப்பட்டது. தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலிருந்து வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் இந்தப் போட்டியை நடத்தி வருகின்றன.
தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பிக்கும் வண்ணம் நேற்று பிற்பகல் மாபெரும் பட்டப் போட்டி வால்வெட்டித்துறையில் உள்ள புனரமைக்கப்பட்ட உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றது. சுமார் 67ற்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டியில் பங்கெடுத்து வானில் பறந்திருந்தன. இவற்றில் நடுவார்களால் தேர்வு செய்யப்பட்ட 20 பட்டங்களிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பட்டம் கட்டுவது என்பது ஒரு கலை. அதனை பல உருவங்களில் கட்டி அதனை ஏற்றுவது என்பது வியக்கத்தக்க விசயமாகும். எட்டுமூலை, சாணாத்தான் கொக்குப்பட்டம், பெட்டிப்பட்டம் போன்ற பட்டங்களை கட்டி ஏற்றிவிட்டு பட்டம் விடுதல் என்று முடித்து விடாமல் அதில் மாற்றங்கள் கொண்டு வந்து, பலவகையான உருவங்களை பறக்கவிடுகின்றமையே பட்டம் விடும் போட்டிக்கு அதிக வரவேற்பு கிடைப்பதற்கு காரணம் எனலாம்.பட்டப் போட்டி இந்தளவுக்கு வரவேற்பு பெற்றமைக்கு அந்த போட்டியில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சம் தான் காரணம் என்று கூறமுடியாது. அதற்கும் மேல் அந்தப் போட்டியில் ஒளிந்திருக்கும் கலையம்சமே காரணம் என்று கூறப்படுகிறது.
யாழ்பாணத்தில் பட்டம்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டித் திருவிழாவில் தாஜ்மகால், வர்ண மீன், காற்றலைப் பட்டம், ஸ்ரீ லங்கன் விமானம், பிரமிட், வேவு விமானம், பராக்கிளைடர், உழவு இயந்திரம், உதயசூரியன் இலச்சினை, இரட்டைக்கொக்கு, கொக்கு,மயில், படகு இயந்திரம், உள்ளிட்ட 67 வகையான பட்டங்கள் பங்கேற்றன.
பிரபாகரன் பிறந்த ஊர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் ஆண்டு தோறும் மிகப் பிரமாண்டமாக இந்தப் பட்டப் போட்டித் திருவிழா நடைபெறுவது சிறப்பம்சமாகும். அம்சமாகும்.
வானில் பறந்த பட்டங்கள்
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை வானில் பறந்த பல்வேறு அழகிய வண்ணங்களில் உருவான ஏராளமான பிரமாண்ட பட்டங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. சிவன் மலை காட்சி, நவீன போர் விமானம், திருக்கை மீன், பருந்து, வௌவால், முப்பரிமான பட்டம், பறக்கும் தட்டு, அனகோண்டா பாம்பு, டைனோசர் என வித விதமான பட்டங்கள் விண்ணில் பறந்தன.
உதயசூரியன் கடற்கரை
பட்டத் திருவிழாவைக் கண்டுகளிக்க யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வல்வெட்டித்துறையில் திரண்டதால் உதயசூரியன் கடற்கரை நிரம்பி வழிந்தது.
சிறந்த பட்டங்களுக்கு பரிசு
பட்டத்திருவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றியதுடன், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஆண்டுதோறும் பட்டப் போட்டி
உதய சூரியன் கடற்கரையில் ஆண்டு தோறும் தை திருநாளில் பட்டப்போட்டி ஒவ்வொரு முறையும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளை, பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. வடமராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்ல வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி ஏன் தீவகப்பகுதி மக்களும் கூட பட்டப்போட்டியை பார்க்க வல்வெட்டித்துறையை நோக்கிப் படை எடுத்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.