ராஜபக்சே பதுக்கி வைத்த நகை, கோடிக்கணக்கில் பணம் கண்டுபிடிப்பு
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பதுக்கி வைத்திருந்த நகை, பணம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் பெட்ரோலிய நிறுவனத்திற்கும், ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கிக்கும் இடையே 7.5 பில்லியன் ரூபாய் அளவுக்கு ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. 2013ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனால் பெட்ரோலிய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்த ஆவணங்கள் பெட்ரோலிய நிறுவனத்தில் உள்ள 5 அறைகளில் இருப்பதாகவும், அவற்றை அழிக்க திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த 5 அறைகளையும் மூடுமாறு இலங்கை மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே பதுக்கி வைத்த நகைகள், 500 மில்லியன் ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நமல், பசில் ராஜபக்சே:
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், உலங்கு விமானங்களை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ராஜபக்சே ஆட்சியில் அவரது மகன் நமல், சகோதரர் பசில் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் கட்டணம் செலுத்தாமல் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
அதில் நாடாளுமன்ற உறுப்பினரான நமல் அதிகபட்சமாக 24 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் பெல் 412 மற்றும் எம்.ஐ.17 ரக உலங்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளார். நமல், பசில், விமல் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை செய்த விமான பயணத்திற்கான இலுவைத் தொகை மட்டும் ரூ. 830 லட்சம் ஆகும்.