கொரோனா அச்சத்தால் கைதிகள் தப்ப முயற்சி- இலங்கை அநுராதபுரம் சிறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
அநுராதபுரம்: கொரோனா அச்சத்தால் இலங்கை அநுராதரபுரம் சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
அநுராதபுரம் சிறையில் 4 கைதிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சக சிறைகைதிகளிடையே தகவல் பரவியது.
இதனால் அச்சமடைந்த கைதிகள், சிறையை உடைத்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இச்சம்பவத்தால் கைதிகளிகளிடையே பெரும் அச்சமும் பீதியும் நிலவியது. கைதிகளில் சிலர் வன்முறைகளில் இறங்கினர்.
இதையடுத்து உள்ளே நுழைந்த போலீசார் கைதிகளை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.