ஈஸ்டர் தாக்குதல்: இலங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முகாம்- தமிழக, கேரளா தொடர்புகள் குறித்து விசாரணை!
கொழும்பு: ஈஸ்டர் நாளில் தற்கொலைப் படைகள் நடத்திய தாக்குதல்களில் இந்திய தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக என்பது குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கொழும்பில் முகாமிட்டுள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 359 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் சார்பில் நடத்தியிருக்கிறது. தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தினர் இந்தியாவுக்கும் சென்று பயிற்சிகள் எடுத்தனர் என இலங்கை ராணுவம் கூறி வருகிறது.
ஆனால் இந்திய அரசு இதனை மறுத்து வருகிறது. இந்த நிலையில் என்.ஐ.ஏ.வின் இரு அதிகாரிகள் குழு அலோக் மிட்டல் தலைமையில் நேற்று கொழும்பு வந்தடைந்தது. இக்குழுவானது, பயங்கரவாதி சஹ்ரான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பான விவரங்களை கேட்டுள்ளது.
மேலும் தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கும் தமிழகம், கேரளாவில் உள்ள இயக்கங்களுக்குமான தொடர்பு குறித்த விவரங்களையும் கோரியுள்ளது. மேலும் இந்தியாவில் தேசிய தவ்ஹீத் ஜமா அத் தீவிரவாதிகள் குறித்த விசாரணை விவரங்களை என்.ஐ.ஏ. குழு இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது.












Click it and Unblock the Notifications