கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ஈழம், தமிழக தமிழர்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை- டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணம்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் அடுத்த மாதம் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க ஈழத் தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் இலங்கை அரசு திடீரென தடை விதித்துள்ளது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Recommended Video

மன்னார் வளைகுடாவில் உள்ள கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தமானது. மன்னராட்சி காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாடு விடுதலைக்குப் பின்னரும் தமிழகத்தின் ஒரு அங்கமாக, இந்தியாவின் தென்கோடி எல்லைகளில் ஒன்றாக இருந்தது கச்சத்தீவு.
கச்சத்தீவில் சீனிகுப்பன் படையாச்சி என்ற தமிழக மீனவர் அந்தோணியார் தேவாலயத்தை கட்டினார். இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களும் தமிழக பக்தர்களும் கலந்து கொள்வர். இந்த திருவிழா கலாசார அங்கமாக, பெண் கொடுப்பது-பெண் எடுப்பது, வர்த்தக உறவு என பல்வேறு அம்சங்களுடன் முக்கியமானதாக இருந்தது.

இலங்கைக்கு தாரைவார்ப்பு
ஆனால் தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமல் தன்னிச்சையாக 1974-ல் இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்து கொடுத்தது. அப்போது தமிழகம் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 1980களில் தமிழக வரைபடத்தில் இருந்து கச்சத்தீவு பகுதி நீக்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போதும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பது, வலைகளை உலர்த்த அனுமதிப்பது, தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்க அனுமதிப்பது என்கிற சரத்துகள் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

மரண தீவு
இதனை ஒருபோதும் இலங்கை அரசு மதித்து நடப்பது இல்லை. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி ஊடுருவுவதாக கூறி 800க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்துள்ளது. மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும் உள்ளது. இந்த பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

கச்சத்தீவு திருவிழா
இதனிடையே 1980களின் பிற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தை காரணம் காட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான இலங்கை ராணுவத்தின் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அந்தோணியார் கோவில் திருவிழாவில் இருநாட்டு பக்தர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

கொரோனா பரவலால் அனுமதி மறுப்பு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. நடப்பாண்டில் அடுத்த மாதம் மார்ச் 11,12 தேதிகளில் அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழக பக்தர்களை பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று சீனா ஆதரவு இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக பக்தர்களை பங்கேற்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. நேரிலும் சந்தித்து பேசினார். இதனையடுத்து 200 தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என இலங்கை தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

கோத்தபாய உத்தரவால் திடீர் தடை
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கச்சத்தீவு திருவிழா தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றார். இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டக்ளஸ் தேவானந்தா, இம்முறையும் தமிழகம், இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அதிபர் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும் யாழ். மறைமாவட்ட ஆயர்கள் மட்டுமே கச்சத்தீவுக்கு சென்று தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்துவர் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இது தமிழகம், ஈழத் தமிழ் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications