விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது - கோத்தபய
கொழும்பு: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தேசிய கீதம் திருத்தம் மற்றும் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்க இலங்கை மறுத்துள்ளது.
தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின் போது உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அந்தத் தீர்மானத்தை ஏற்க முடியாது என இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு கிழக்கு ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆணைக்குழுவின் 500க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் அமல்படுத்த முடியாது என்று கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடியவாறான பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது என்றும், ஏற்கனவே ஆணைக்குழுவின் 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications