விடுதலைப் புலிகள் தங்கத்தை புதைத்து வைத்தனரா?... தோண்டிப் பார்த்த இலங்கை ஏமாற்றம்!
கொழும்பு: இலங்கையில் விடுதலைப்புலிகள் தங்கம், ஆயுதங்களை புதைத்து வைத்திருப்பதாக எண்ணி தோண்டிப்பார்த்த ராணுவத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தனித்தமிழ் ஈழம் கோரி கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்து வந்த உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தாலும் இலங்கை ராணுவம் பிடித்து சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் நிலை என்ன என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.
எனினும் அதிபர் ராஜபக்ஷே அரசு தோல்வியடைந்து மைத்ரி பால சிரிசேனா அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில் போரின் போது இடம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மீள்குடியேற்றம் செய்யப்படும் தமிழர்கள்
இந்திய அரசின் உதவியுடன் தமிழர்களை மீள்குடியேற்றும் பணிகளும், அவர்களின் நிலங்களை ஈழத்தமிழர்களிடமே ஒப்படைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இருந்த போதும் விடுதலைப்புலிகள் வாழ்ந்த சில இடங்கள் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

விடுதலைப் புலிகள் தங்கம் புதைத்தனரா?
இந்நிலையில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது விடுதலைப்புலிகள் தங்கம் மற்றும் ஆயுதங்களை புதைத்து வைத்திருப்பதாக இலங்கை அரசு நம்பி வருகிறது. இதற்காக சட்டத்திற்கு உட்பட்டும், சட்டத்திற்கு புறம்பாகவும் பல்வேறு சோதனைகளை அரசு ராணுவ உதவியுடன் செய்து வருகிறது.

புதுக்குடியிருப்பில் நடந்த தேடுதல் வேட்டை
இதே போன்று வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஏராளமான தங்கத்தையும், நகைகளையும், ஆயுதங்களையும் ரகசியமாக புதைத்து வைத்துள்ளதாக போலீசாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து முல்லைத்தீவு மாஜிஸ்திரேட்டு அனுமதியுடன் அந்த இடத்தில் ராணுவத்தினர் சுமார் 3 மணி நேரம் கனரக எந்திரங்களை வைத்து சல்லடை போட்டு சளித்துள்ளனர்.

ஏமாற்றமே மிஞ்சியது
ஆனால் அந்தப் பகுதியில் தண்ணீர் தான் கிடைத்ததே தவிர தங்கமோ, ஆயுதங்களோ இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் நேற்றைய சோதனையை முடித்துள்ளனர். எனினும் இன்றும் அந்த இடத்தில் மீண்டும் தோண்டும் பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications