"இதுதான் முதல்முறை.." இலங்கையில் முதல்முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி.. குவிந்த பொதுமக்கள்
கொழும்பு: இலங்கை நாட்டில் முதல்முறையாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பல காளைகளும், மாடு பிடி வீரர்களும் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் நடக்கும். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகெங்கும் புகழ்பெற்றவை.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூட மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்கப் பார்வையாளர்கள் குவிவது வழக்கம். தமிழகத்தில் சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
இலங்கை: அதன்படி இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள தச்சங்குறிச்சி என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கிடையே முதல்முறையாக இலங்கையிலும் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இன்று காலை 10 மணியளவில் இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
கடந்த ஆண்டு திருச்சி வந்த போதே இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.
தச்சங்குறிச்சி தொடங்கிய தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு! சீறி பாயும் காளைகள்! அடக்க தயாராக காளையர்கள்
இலங்கை ஜல்லிக்கட்டு: ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் அங்கே பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்த பொங்கல் விழா நடக்கும் நிலையில், முதல் நாளான இன்று காலை 10 மணிக்குத் திரிகோணமலை, சம்பூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 200 காளைகளும், சுமார் 100க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதற்குத் தேவையான கேலரி, மேடை, இரும்பு தடுப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டன. இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், அதைக் காணப் பலரும் திரிகோணமலைக்குக் குவிந்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications