பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி- இலங்கையில் மீண்டும் போராட்ட புயல்!
கொழும்பு: இலங்கையில் தமிழ் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது அமைதி நிலவினாலும் தமிழக பகுதி முழுவதும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனால் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்ற வவுனியா மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். பண்டாரி குளத்தை சேர்ந்த ஹரிஸ்னா என்ற மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவி கொலை மற்றும் பலாத்கார சம்பவத்தை கண்டித்து கடை அடைப்பு சம்பவம் நடந்தது.
வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் கடை அடைப்பில் ஈடுபட்டனர். இதனால், தனியார் பஸ், ஆட்டோ ஆகியவைகளும் ஓடவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது.