விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு..கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க கராத்தே தியாகராஜன் வேண்டுகோள்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
நடிகர் விஷாலும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்த அவர், தனக்க விசில் சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
விஷாலுக்கு குஷ்பு வாழ்த்து
ஆர்கே நகர் இடைத்தேர்தல் மூலம் அரசியலில் குதித்துள்ள நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் டிவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
|
குஷ்புவுக்கு எதிர்ப்பு
தனது டிவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு நீ மாற்றத்தை கொண்டுவருவாய், உனக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழப்பத்தையும் கலகத்தையும்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகை குஷ்பு, விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து குழப்பத்தையும் கலகத்தையும் ஏற்படுத்துகிறார் என்றும் கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
பார்ட் டைம் தலைவரா?
இந்திராகாந்தி பிறந்த நாள் விழாவில் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர் என கூறியதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அப்போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசர் பார்ட் டைம் தலைவரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடும் நடவடிக்கை - வலியுறுத்தல்
திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர் விஷாலுக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து குட்டையை குழப்பி வரும் குஷ்பு மீது காங்கிரஸ் கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காராத்தே தியகாராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.