ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் இருந்து கருணா விலகல்... ஆனந்த சங்கரியோடு ஐக்கியம்!!
கொழும்பு: இலங்கையின் ஆளும் கட்சிகளில் ஒன்றான சுதந்திர கட்சியில் இருந்து விலகுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்த கருணா தெரிவித்துள்ளார். மேலும் ஆனந்த சங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணையப் போவதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா. ஆனால் ராஜபக்சே விரித்த வலையில் சிக்கி புலிகள் இயக்கத்தை காட்டி கொடுத்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் இணைந்து துணைத் தலைவரானார்.. எம்.பி.யானார். ஆனால் இலங்கை அரசியலில் மகிந்த ராஜபக்சேவின் சரித்திரம் முடிந்து போனதால் கருணா கைவிடப்பட்டுவிட்டார்.
தற்போது சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாக இருந்த போதும் கருணாவை யாரும் சீண்டுவது இல்லை. இதனால் சுதந்திரக் கட்சியில் இருந்து விலகுவதாகவும் ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணையப் போவதாகவும் கருணா கூறியுள்ளார்.
ஆனந்தசங்கரி ஏற்கெனவே ஈழத் தமிழர்களிடத்தில் அன்னியப்பட்டு நிற்பவர்.. அவருடன் கருணா இணைவது இருவரது பரிதாபத நிலையை வெளிப்படுத்துகிறது.