சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்: மதுரையில் வகுப்பு புறக்கணிப்பு
சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மதுரையிலும் காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துள்ளனர்.
மெட்ரோ ரயில்திட்டப் பணிகள் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிமுனையில், சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மோதலில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க சட்டக்கல்லூரிக்கு 7 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனாலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தலைமை செயலகத்திற்கு சென்று சட்டத்துறை செயலாளர் (பொறுப்பு) பூவலிங்கத்தை மாணவ பிரதிநிதிகள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.
சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் தான் மாணவ பிரதிநிதிகளிடம் வந்து பேசினார். அவரிடம் மாணவர்கள் கூறும் போது, சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மாணவர்களை தாக்கிய போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்தனர்.
இதை கேட்டறிந்த சந்தோஷ்குமார் சட்டத்துறை செயலாளர் பூவலிங்கத்திடம் கூறினார். அவர் மாணவர்களின் கோரிக்கையை பின்னர் கேட்டறிந்தார்.
அதன் பிறகு மாணவர்களை சந்தித்த சந்தோஷ் குமார், உங்களது கோரிக்கை இன்று பரிசீலிக்கப்படும். சட்டத்துறை செயலாளர் கூறும் கருத்தை உங்களிடம் தெரிவிப்போம் என்றார்.
நான்காவது நாளாக நீடிப்பு
இதனால் இன்று காலை வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் மாணவர்கள் இன்றும் 4-வது நாளாக கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
உண்ணாவிரதம் தொடக்கம்
இதன் தொடர்ச்சியாக ஒருபிரிவு மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ட்டக்கல்லூரி விஷயத்தில் முடிவு எட்டப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என மாணவர்கள் கூறியுள்ளனர். இது எங்கள் மாணவ சமுதாயத்துக்காக நடத்தும் போராட்டம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் போராட்டம்
இதனிடையே சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. சட்டக்கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது அரசு கலைக்கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.