100 பானைகள் வைத்து பொங்கல் விழா: இலங்கையில் கோலாகலம்
கொழும்பு: இலங்கையின் யாழ்ப்பாணம், மறவன்புலவு பகுதியில் உள்ள வள்ளக்குளப் பிள்ளையார் கோயிலில், 100 பானைகளில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர் மக்கள்.
மறவன்புலவு பகுதியிலுள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்த 100 வீட்டுக்காரர்கள், ஆண்டுதோறும் பொங்கல் நன்னாளில் வள்ளக்குளப் பிள்ளையார் கோயிலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிடுவர். கருவறைக்குள் இறைவன் திருவுருவுக்கு அம்மக்களே நீராட்டி பூஜையும் செய்வார்கள்.
100 அடுப்புகளில் 100 பானைகளில், 100 பொங்கல்களும் ஒரே படையலாக்கிச் சூரியனுக்கு நன்றி தெரிவித்து ஒளிச் சேர்க்கை நாளாக இதை கொண்டாடிவருகின்றனர். இந்த ஆண்டும் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நல்லி குப்புசாமி செட்டியார் 100 வேட்டிகள், 100 புடவைகள் அன்பளிப்பாக அளித்திருந்தார்.
யாழ்ப்பாணம் அண்ணா தொழிலகம் நடராசா 100 பானைகளை அளித்திருந்தார். இதுகுறித்து,
மறவன்புலவு க. சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:மே மாதம் முதல் நாள். உலகத் தொழிலாளர் நாள், பெப்புருவரி பதினான்கு. உலகக் காதலர் நாள், மார்ச்சு எட்டு உலகப் பெண்கள் நாள், ஏப்ரல் ஒன்று, உலக முட்டாள்கள் நாள்.தை முதல் நாள், தமிழர் திருநாள்.மனித ஆற்றலின் காரணி சூரிய ஒளி என்பதை விழிப்பூட்ட வந்த நாள் பொங்கல் நாள். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்.இந்த அறிவியல் திருநாளே தமிழர் திருநாள்.
தைப் பொங்கல் திருநாள். ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடும் நாள். இது உலக ஒளிச் சேர்க்கை நாள் (International Photosynthesis Day).
கடவுள் நம்பிக்கை நாள் அல்ல. மூட நம்பிக்கை நாள் அல்ல. மரபில் வந்ததால் மட்டும் கொண்டாடும் நாள் அல்ல.அறிவியல் சார்ந்த நிகழ்வுக்கு விழிப்புணர்வூட்டும் நாள். 6CO2 + 6H2O (+ஒளி ஆற்றல்) (ஊக்கியாகப் பச்சையத் தளம்) → C6H12O6 + 6O2 சூத்திரத்தை அறிவியலாளர் அறிவிக்க முன்பே
தமிழர் அறிவில் தோன்றியதால் விழிப்பூட்டும் நாள். ஒளிச் சேர்க்கை நாள்.இவ்வாறு கூறியுள்ளார்.