இனி அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழிலும் தேசிய கீதம்- இலங்கை அரசு
கொழும்பு: வரும் சுதந்திர தினத்திலிருந்து, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேனாரத்ன செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விழாக்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் சிங்கள மொழிக்கும், சிங்கள பெளத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும், தமிழ் மக்களுக்கும் உள்ளன. தமிழ் பேசும் மக்களின் மொழியையும் மதித்து அவர்களின் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புகளின் ஒன்றாகும்.
அதை உறுதிப்படுத்தும் வகையில், வருகின்ற சுதந்திர தின நாளிலிருந்து (பிப் 4) இலங்கையில் சகல அரசாங்க நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் இலங்கையின் தேசியகீதம் பாடப்படும்.
இதையும் சிலர் எதிர்க்கக் கூடும். ஆனால் அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை," என்றார்.