விலை உயர்ந்த சொகுசு கார்கள் பதுக்கலா? முன்னாள் அதிபர் ராஜபக்சே வீட்டில் போலீசார் அதிரடி ரெய்டு!!
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வீட்டில் விலை உயர்ந்த அதி சொகுசு கார்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்ற பின்னர் கடந்த 2 வாரங்களாக ராஜபக்சே குடும்பத்தினர் எப்படியெல்லாம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது.
ராஜபக்சே வசித்த அதிகாரப்பூர்வ கொழும்பு அலரி மாளிகையின் கழிப்பறைகளுக்கும் கூட ஏ.சி. பொருத்தப்பட்டிருந்ததை இலங்கை அரசு தொலைக்காட்சி வெளிப்படுத்தியது. ராஜபக்சேவின் மகன்கள் பயன்படுத்திய சிறிய ரக ஹெலிகாப்டரும் கண்டுபிடிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் ராஜபக்சே பதுக்கி வைத்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிலியாந்தலை என்ற இடத்தில் சில நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்த அதிசொகுசு லம்போகினி ரக ரேஸ் கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தும் அம்பலமானது.
இந்த கார் ராஜபக்சேவின் மகன்களுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் ராஜபக்சேவின் தங்காலை வீட்டில் பொலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனை நடவடிக்கையின்போது எந்த வாகனங்களும் கைப்பற்றப்படவில்லை என்று பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, எங்கள் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. லம்போகினி சொகுசு கார் இருக்கிறதா என்று சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கடல் விமானம் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருக்கிறோம் என்ற பொய்யான புகார்களின் அடிப்படையில் இந்த சோதனையை போலீசார் நடத்தியுள்ளனர் என்றார்.
இதனிடையே ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே, தமக்கு எதிரானவர்களை படுகொலை செய்வதற்காக 'மரண படை' ஒன்றை வைத்திருந்ததாகவும் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.