இலங்கையில் திடீரென அவசர நிலை பிரகடனம்! தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்க மக்கள் கடும் எதிர்ப்பு!
கொழும்பு: இலங்கையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அதி தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரநிலையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரகடனப்படுத்தி உள்ளார்.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த கோத்தபாய ராஜபக்சே, நாட்டை விட்டு தப்பி ஓடி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். கோத்தபாய நாட்டை விட்டு ஓடினாலும் மக்கள் கோபம் அடங்கவில்லை.

தற்காலிக ஜனாதிபதியா?
இன்னொரு பக்கம் இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின. ரணில் மீதும் மக்கள் ஏற்கனவே கோபத்திலும் அதிருப்தியிலு9ம் உள்ளனர். இந்த நிலையில் ரணில், தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்க கூடாது எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்னர். அத்துடன் கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உதவியதும் அம்பலமானது.

பொதுமக்கள் படையெடுப்பு
இதனால் கொந்தளித்த பொதுமக்கள் இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் இருந்து கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம் நோக்கி சாரை சாரையாக படையெடுத்தனர். இதையடுத்து கொழும்பில் அதி உச்ச பதற்றம் நிலவியது. கொழும்பில் பிரதமர் ரணில் அலுவலகம் முன்பாக குவிந்த மக்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

விமானப் படை ஹெலிகாப்டர்கள்
அப்போது பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினரும் போலீசாரும் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். பொதுமக்களை நோக்கி கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தபடியே மிரட்டின.
Recommended Video

அதிரடி உத்தரவுகள்
ஜனாதிபதி கோத்தபாய அலுவலகத்தைப் பொதுமக்கள் கைப்பற்றியது போல, பிரதமர் அலுவலகமும் பொதுமக்கள் வசமாகும் நிலை உள்ளது. இதனையடுத்து இலங்கை முழுவதும் அவசரநிலையை ரணில் விக்கிரமசிங்கே பிரகடனப்படுத்தி உள்ளார். அத்துடன் போராட்டங்களால் பதற்றம் நிலவும் மேல்மாகாணத்தில் உடனே அமல்படுத்தக் கூடிய ஊரடங்கு சட்டத்தை செயல்படுத்த ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். வன்முறைகளில் ஈடுபடுகிற நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார். போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே என்கின்றன கொழும்பு தகவல்கள்.












Click it and Unblock the Notifications