அடுக்கடுக்கடுக்கான ஊழல் புகாரால் அலறும் ராஜபக்சே! என்னம்மா இப்படி பண்றீங்களே.: மீண்டும் புலம்பல்!!
கொழும்பு: தம் மீதும் குடும்பத்தினர் மீதும் விஸ்வரூபமெடுத்து வரும் ஊழல் புகார்களால் முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நடுநடுங்கிப் போயுள்ளார். தாமோ தமது குடும்பத்தினரோ எந்த ஒரு தவறுமே செய்யவில்லை.. புதிய அரசு எங்களை நிம்மதியாக வாழவிடவில்லை என்று புலம்பியபடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மகிந்த ராஜபக்சே.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்த நாள் முதல் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் ஊழல் புகார்கள் கிளம்பி வருகின்றன.. ராஜபக்சேவும் அவரது குடும்பத்தாரும் இலங்கையை எப்படியெல்லாம் சூறையாடினர் என்று நாள்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன..
Letter to the people of #SriLanka by former President Mahinda Rajapaksa. English: http://t.co/9acuWS3Zep; Sinhala: http://t.co/9CXeisnTkM
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) January 27, 2015
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:
எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக குரோத உணர்வுடன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக ஊடகங்களில் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக மிக மோசமான வகையில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன.
கடந்த 9-ந் தேதி அதிகாலையில் அதிபர் மாளிகையில் இராணுவ புரட்சிக்கான சூழ்ச்சித் திட்டங்கள் எதுவும் நடக்கவே இல்லை. இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே சுமூகமான முறையில் நான் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினேன்.
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் எனது குடும்பத்தினருக்கு எதிராக கடுமையான அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதிபர் மாளிகையின் உட்பகுதியில் மக்கள் பணத்தில் பெரிய அளவில் ஆடம்பர கட்டிடங்கள் கட்டப்பட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக செய்திகள் பரப்பப்படுகின்றன.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்களின் வசதிக்காகத்தான் கழிவறைகைளில் ஏசி பொருத்தப்பட்டது.
எனது மனைவி தங்கம் கடத்தியதாக தற்போது குற்றம் சுமத்தப்படுகிறது. இதற்கு போலீசார் பதிலளிக்கின்றனர். அதனால் அது பற்றி நான் பேசப் போவதில்லை.
எனது அரசு ஊழல், நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது
புதிய அரசு என்னை அமைதியாக வாழவிட மறுக்கிறது. என் மீது ஏராளமான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை குழப்ப முயற்சி செய்கிறது.
இவ்வாறு மகிந்த ராஜபக்சே தமது அறிக்கையில் புலம்பியுள்ளார்.