தன்னைத் தானே படு குழியில் தள்ளிக் கொண்ட சர்வாதிகாரி ராஜபக்சே!
கொழும்பு: அதிபர் பதவியிலிருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ள ராஜபக்சே, தனது கதையை தானே முடித்துக் கொண்டுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி தன்னைத் தானே படுகுழியில் தள்ளி விட்டு தனது கதையே தானே முடித்துக் கொண்டுள்ளார். தனக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவி வந்ததைப் பார்த்து 2 ஆண்டுகள் பதவிக்காலம் இன்னும் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே.
எப்படியாவது ஜெயித்து விட வேண்டு்ம் என்ற வைராக்கியத்துடன் இருந்து வந்த அவருக்கு மைத்ரிபால ஸ்ரீசேன மூலம் பெரும் சவால் உண்டானது. ஆனால் தமிழர்களின் வாக்குகளை வைத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்ற நப்பாசையுடன் இருந்தார் ராஜபக்சே. ஆனால் அதில் மண் விழுந்து விட்டது.
தமிழர்கள் முற்றாக ராஜபக்சேவை புறக்கணித்து விட்டனர். வரலாறு காணாத அளவுக்கு தமிழர் பகுதிகளுக்கு நேரில் போய் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கெஞ்சி வாக்குகள் கேட்டார். ஆனாலும் ராஜபக்சேவை தமிழர்கள் ஏற்கவில்லை.
தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று கூறி லட்சக்கணக்கான தமிழ் மக்களை கூண்டோடு கொன்று குவித்த கையோடு இலங்கையின் காவலராக தன்னைக் காட்டிக் கொண்டவர் ராஜபக்சே. ஆனால் தமிழர்களை அழித்த கையோடு சிங்களர்களையும் அவர் பதம் பார்த்து விட்டார். தன்னை எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும், அவன் சிங்களவனாகவே இருந்தாலும் உயிரோடு விட மாட்டேன் என்பது போல அவரது நடவடிக்கைகள் அமைந்ததைப் பார்த்து சிங்களர்களே அதிர்ந்து போனார்கள்.
ராஜபக்சே 2 முறை அதிபர் பதவியில் இருந்தார். இந்த இரண்டு ஆட்சிக்காலத்திலும், தமிழர்களைப் போலவே சிங்களர்களும் ராஜபக்சே கும்பலின் கொலை வெறியாட்டத்தில் சிக்கித் தவித்தனர். எதிர்த்தவர்களை எல்லாம் வெள்ளை வேனில் ஏற்றிச் சென்று விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்தது ராஜபக்சே கும்பல்.
குறிப்பாக முக்கியமான சில சிங்களப் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர். பலர் காணாமல் போயினர். பலர் தாக்குதலுக்குள்ளாகினர்.
தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே இந்த ராஜபக்சே நிறைவேற்றவில்லை. மேலும் தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்ட ராணுவத்தையும் திரும்பப் பெறவில்லை. மாறாக ராணுவத்தினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர்கள் வாழும் நிலை ஏற்பட்டது. காணாமல் போன பல ஆயிரம் தமிழர்களின் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை. தமிழர்களின் சுதந்திரமான வாழ்க்கை தடைபட்டது. ராஜபக்சே கும்பலுக்குப் பயந்து வாழும் நிலையில்தான் இன்று வரை தமிழர்கள் உள்ளனர். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இன்று வரை முடிவு கட்டவில்லை ராஜபக்சே.
தமிழர் கட்சிகளையும் கூட தனது அடிமைகள் போல நடப்பதையே அவர் விரும்பினார். ராஜபக்சே மீது சிங்களர்களுக்கு கடும் வெறுப்பு வர இன்னொரு முக்கியக் காரணம், ராஜபக்சே குடும்பத்தினர் போட்ட ஆட்டம். அவரது தம்பி கோத்தபயா, பசில் ராஜபக்சே போக மகன்களும் சேர்ந்து ஆட ஆரம்பித்தனர். நமல் ராஜபக்சே அதில் முக்கியமானவர்.
நாட்டைக் காக்கிறேன், தீவிரவாதத்தை ஒழித்து விட்டேன் என்று கூறிக் கூறியே நாட்டின் வளத்தை தன் வளமாக்க ராஜபக்சே முயன்றதும் சிங்களர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.
3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட ராஜபக்சே முடிவு செய்ததுமே அவருக்கு சனி பிடித்து விட்டது. யாரும் எதிர்பாராத வகையில் அவரது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும், முக்கிய அமைச்சருமான மைத்ரிபால தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து களத்தில் குதித்தார். மேலும் பல கூட்டணிக் கட்சிகள் ராஜபக்சேவை விட்டு விலகின. முஸ்லீம் கட்சிகள் விலகின, தமிழர் கட்சிகள் விலகின. பல முக்கிய சிங்களக் கட்சிகளும் ராஜபக்சேவுக்கு எதிராக திரும்பின.
கடந்த பத்து வருடமாக இலங்கையின் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய ராஜபக்சே ஆரம்பத்தில் சிங்களர்களைக் காக்க வந்த ரட்சகர் போலத்தான் பார்க்கப்பட்டார். ஆனால் அவரது சுயரூபம் போகப் போகத் தெரிய வரவே சிங்களர்கள் கோபமடைந்து விட்டனர். இவரை மாற்றியாக வேண்டும் என்ற வேட்கை அவர்களிடையே எழுந்தது. ஹீரோவாக பார்க்கப்பட்ட ராஜபக்சே இன்று ஜீரோவாக மாறி தூக்கி எறியப்பட்டுள்ளார்.
ஊழல், சர்வாதிகாரம், எதிர்த்து யார் பேசினாலும் கைது, கொலை என்று ராஜபக்சே கும்பல் மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்ததே இதற்கு முக்கியக் காரணம்.
இலங்கையை தனது சொத்து போல பாவித்து நாட்டையே சுரண்ட ஆரம்பித்து விட்ட இந்த கும்பலை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்ற முடிவோடுதான் சிங்களர்கள் இந்த முறை ராஜபக்சேவை விரட்டி விட்டுள்ளனர், கைவிட்டுள்ளனர்.
இருப்பினும் இன்னும் ஒரு சிங்கள பெளத்த அரசியல் தலைவரையே அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர் தமிழர்கள்... இவர் ராஜபக்சே போல கொடூரமானவராக இருக்க மாட்டார் என்ற சிறிய நம்பிக்கையில். பார்க்கலாம், ஸ்ரீசேன என்ன செய்ப் போகிறார் என்று.