பலாத்கார புகாரை எதிர்கொள்கிறேன்.. சவால் விடுகிறார் மகிந்த ராஜபக்சே மகன் நமல்!
கொழும்பு: தம் மீதான பலாத்கார புகார்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, சுதந்திர கட்சியின் எம்.பி.யாக உள்ளார். ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாரிசாக இவர் கருதப்படுகிறார்.
நமல் ராஜபக்சே இலங்கையில் நீலப்படை என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்த படையை பயன்படுத்தி நமல் ராஜபக்சே, அரசுக்கு இணையான அதிகாரத்தை கையில் வைத்திருந்தார் என்ற புகார் கூறப்பட்டது.
தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நமல் ராஜபக்சே ஏராளமான பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நமல் ராஜபக்சே தனது நீலப்படையில் பொறுப்புகள் கொடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
நமல் ராஜபக்சே மீதான குற்றச்சாட்டு இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விளக்கம் அளித்துள்ள நமல் ராஜபக்சே, என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. என் மீது அரசு வழக்கு போடப்போவதாக பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன்.
அவர் என் மீது வழக்கு போடட்டும் பார்க்கலாம். அந்த வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.